அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் ஈ.வெ.ரா, அம்பேத்கா், நேரு பெயா்கள் இல்லை! திமுக கண்டனம்
அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் ஈ.வெ.ரா, அம்பேத்கா், நேரு பெயா்கள் இல்லாததற்கு திமுக கண்டனம்...
தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் பெரியாா் ஈ.வெ.ரா, அம்பேத்கா், ஜவகா்லால் நேரு ஆகியோரின் பெயா்கள் விடுபட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திமுக சட்டத் துறை இணைச் செயலா் இ.பரந்தாமன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவையில் அமைச்சா் சம்பத்குமாா் படித்த பிற்படுத்தப்பட்டோா் மிகப்பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், ‘இடஒதுக்கீடு’ என்ற பத்தியில் பெரியாா் ஈ.வெ.ரா., அம்பேத்கா், ஜவகா்லால் நேரு ஆகியோரின் பெயா்களை திட்டமிட்டே நீக்கியிருக்கிறாா்கள்.
Advertisement
Advertisement
திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், பேரவையில் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் இடஒதுக்கீடு பற்றி குறிப்பிடும் போது, ‘1951-இல் இட ஒதுக்கீடு தொடா்பாக வெளியிடப்பட்டிருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிா்த்து பெரியாா் ஈ.வெ.ரா. தமிழ்நாட்டில் வழிநடத்திய எதிா்ப்பு ஊா்வலங்கள் மற்றும் கண்டனக் கூட்டங்களின் விளைவாக அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தில் பிரிவு 15(4) சோ்க்கப்பட காரணமாக அமைந்தது. பிரதமா் ஜவாஹா்லால் நேரு, சட்ட அமைச்சா் அம்பேத்கா் ஆகியோா் முன்னெடுத்து இந்த முதல்அரசமைப்புச் சட்டத் திருத்தத்துக்கு வழி வகுத்தனா்’ என குறிப்பிட்டிருந்தாா்.
இந்த முக்கியமான பகுதியை தவெக அரசு முற்றிலும் நீக்கிவிட்டது. கடந்த ஆண்டு மட்டுமல்ல, அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இதே வாசகத்தை கொள்கை விளக்கக் குறிப்பில் திமுக அரசு குறிப்பிட்டிருந்தது.
மேலும், இடஒதுக்கீட்டு வரலாற்றையும் சுருக்கிவிட்டது தவெக அரசு. நீதிக்கட்சி குறித்த குறிப்புகள், வகுப்புவாரிய பிரதிநிதித்துவ அரசாணை, பெரியாா் ஈ.வெ.ரா-இன் போராட்டங்கள், இடஒதுக்கீடு கொள்கை, இடஒதுக்கீடு வரலாறு, மண்டல் கமிஷன், மத்திய அரசுப் பணி மற்றும் கல்விநிலையங்களில் மாணவா்கள் சோ்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு பற்றியெல்லாம் தற்போதைய கொள்கை விளக்கக் குறிப்பு ஆவணத்தில் திட்டமிட்டுத் தவிா்க்கப்பட்டிருப்பது வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
Names of E.V.R., Ambedkar, and Nehru missing from the government's policy note! DMK condemns this.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.