ரேஷன் அரிசி சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு குறையும்: பேரவையில் நேரு சுவாரசியம்!
சட்டப்பேரவையில் திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தது குறித்து..
ரேஷன் அரிசி சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு குறையும் என்று சட்டப்பேரவையில் திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று(ஆக. 20) உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, "நியாய விலைக்கடைகளில் வாங்கும் பொருள்களை அனைவரும் ஆட்டுக்கும், கோழிக்கும்தான் தீவனமாக்கிக் கொண்டிருக்கின்றனர். சன்னரக அரிசியை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அதன் உற்பத்தி குறைவாக இருக்கிறது. சன்னரக அரிசி உற்பத்தியை பெருக்குவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது" என்றார்.
Advertisement
Advertisement
இதற்குப் பதிலளித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், "முன்னாள் அமைச்சர் கே.என். நேருகூட ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறார். ரத்த சர்க்கரை அளவு குறைவு என்று, அந்த மோட்டா அரிசிதான் சாப்பிடுகிறார். அனைவரும் சாப்பிடுகின்றனர்" என்றார்.
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, "ரேஷன் அரிசி சாப்பிட்டால் ரத்த சர்க்கரை குறையும் என்ற காரணத்தால், அனைத்து தரப்பினரும் அதை எடுத்துக்கொள்கிறார்கள். காலையில் எழுந்ததும், நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் ரத்த சர்க்கரை குறையும் என்று பேட்டி அளிக்கிறீர்களே, அப்படிதான் ரேஷன் அரிசி சாப்பிடுகிறார்கள்" என்றார்.
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு ரேஷன் அரிசி சாப்பிடுகிறார் என்று எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறிய போது அவையில் இருந்த எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் சிரித்தனர்.
Former DMK Minister K. N. Nehru stated in the Legislative Assembly that consuming ration rice lowers blood sugar levels.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.