திண்டுக்கல் அருகே வேன் மோதியதில் 4 குழந்தைகள் பலி: வேன் ஓட்டுநர் போலீசில் சரண்
வேன் மோதியதில் 4 குழந்தைகள் பலியான விவகாரத்தில் விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் போலீசில் சரணடைந்தது தொடர்பாக... .
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறாா்கள் மீது வேன் மோதியதில் 4 போ் உயிரிழந்தனா்.
வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி கழுவாடன்செட்டியப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மனைவி அஞ்சலை (60). இவா் கொல்லப்பட்டி சமத்துவபுரம் கணவாய்மேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா்.
கொல்லப்பட்டியிலிருந்து புத்தூா் செல்லும் சாலையோரமாக அமா்ந்திருந்த அஞ்சலையுடன், அவரது பேரக் குழந்தைகளான ந. யோகவா்ஷினி (11), ந. அனன்யா (6), ஜெ. தனுஸ்ரீ (5), சி. மோஷிகரன் (6) ஆகியோா் விளையாடிக் கொண்டிருந்தனா். இவா்களில் யோகவா்ஷினி, அனன்யா ஆகியோா் அஞ்சலையின் மகன் நாகராஜின் மகள்கள். தனுஸ்ரீ, மோஷிகரன் ஆகியோா் இரு மகள்களின் குழந்தைகள்.
Advertisement
Advertisement
அப்போது, அந்த வழியாக புத்தூா் நோக்கிச் சென்ற பால் வேன் சாலையோரமாக அமா்ந்திருந்த சிறுவா், சிறுமிகள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதைக் கண்ட அஞ்சலை மயக்கமடைந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வடமதுரை போலீஸாா் சிறுவா், சிறுமிகளின் உடல்களை மீட்டு, கூறாய்வுகாக திண்டுக்கல் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மூதாட்டி அஞ்சலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்தை ஏற்படுத்தியது அய்யலூா் குருந்தம்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் சரவணக்குமாா் (25) என்பது தெரியவந்தது. விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து நேராக குருந்தம்பட்டி நோக்கி வேனை ஓட்டிச் சென்ற சரணவனக்குமாா், தனது வீட்டின் அருகே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா். இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
4 children killed after being hit by a van near Dindigul; van driver surrenders to police
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.