“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” என அவரது நினைவு நாளில் அவரை நினைவுகூர்ந்து முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 57 வது நினைவு நாளான இன்று (பிப். 3) தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக, அதிமுகவினர், அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அவரது உருவச்சிலை, புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அண்ணாவின் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்ணாவின் புகழை நினைவுகூரும் விதமாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியுள்ளார்.
அந்தப் பதிவில், “பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி! நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு! அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது திமுக அரசு.
மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOut-தான்! ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.