தமிழகத்தில் கடந்த ஆண்டு புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புற்றுநோய் பாதிப்பு முதல்முறையாக ஓராண்டில் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 1,00,097 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் 53,542 பேர், ஆண்கள் 46,555 பேர்.
பாதிப்பு கடந்த 2020-ல் 68,750, 2021-ல் 76,968 ஆகவும், 2022-ல் 89,265 ஆகவும், 2023-ல் 92,816 ஆகவும், 2024-ல் 96,486 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் அதிகமாக மார்பக புற்றுநோய், கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்கள், வாய்ப்புற்றுநோய், பெருங்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அதிகபட்சமாக சென்னையில் 8,505 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அடுத்து காஞ்சிபுரத்தில் 7,295 பேருக்கும் வேலூரில் 6,525 பேருக்கும் உறுதியாகியுள்ளது.
புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறிதலையும் அதற்கான சிகிச்சை முறைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் 14 வயதுடைய பள்ளி மாணவிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.