சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள் அனைவரையும் சிபிஐ கைது செய்ய வேண்டும் என்று பாமக, தேமுதிக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவா்): நகைத் திருட்டு புகாரின் அடிப்படையில் மடப்புரம், ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரை காவல் துறையினா் அடித்துக் கொலை செய்திருப்பதாக மதுரை உயா்நீதிமன்ற அமா்வில் சிபிஐ கூறியுள்ளது. அஜித்குமாா் அப்பாவி என்பது உறுதியான நிலையில், அவா் மீது பொய் புகாா் கொடுத்த நிகிதா, அவருக்காக காவலா்களை ஏவிய உயரதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிந்து, கைது செய்ய வேண்டும். அஜித்குமாா் குடும்பத்துக்கு ஏற்கனவே வழங்கிய ரூ.25 லட்சத்துடன் கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக பொதுச் செயலா்): கோயில் காவலாளி அஜித்குமாா் காவல் துறையால் தாக்கப்பட்டு இறந்த சம்பவம், மனித இனத்தையே உலுக்கிய மிகப்பெரிய மனித உரிமை மீறல். உரிய முறையில் வழக்கு நடத்தி, குற்றவாளிகளுக்கு தமிழக அரசு ஆயுள் தண்டனை பெற்றுத் தர வேண்டும். விசாரணை என்ற பெயரில் காவல் துறையால் நடத்தப்படும் இத்தகையை அநீதிகள் நிறுத்தப்பட வேண்டும்.