பெருந்தன்மை வேண்டாம்; நியாயத்தை மட்டுமே கோருகிறோம்: தங்கம் தென்னரசு
பெருந்தன்மை வேண்டாம், நியாயத்தை மட்டுமே கோருகிறோம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சென்னை: மத்திய அரசிடம் பெருந்தன்மையை எதிர்பார்க்கவில்லை, சமநிலையினை உறுதி செய்யும் நியாயத்தை மட்டுமே கோருகிறோம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பட்ஜெட் நிறைவாக சில கவலைகளை வெளியிட்டிருந்தார்.
அதில், மாநிலங்களுக்கிடையிலான கிடைமட்டப் பகிர்வில், மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு உரிய நியாயமான பங்கு வழங்கப்படாமல் நிதிக்குழு பாரபட்சமாக நடந்துகொண்டுள்ளது.
Advertisement
Advertisement
ஒன்பதாவது நிதிக்குழு காலத்தில், தமிழ்நாட்டிற்கான பங்கு 7.931 சதவீதமாக இருந்த நிலையில், தொடர்ந்து வந்த நிதிக் குழுக்கள் அதனைக் குறைத்து வந்தன.
இந்தப் பங்கு அண்மையில் 4.079 சதவீதமாகக் குறைந்ததால் தமிழகத்துக்கு 3.17 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது, தமிழ்நாடு அரசின் நிலுவைக் கடனில் சுமார் 33 சதவீதத்திற்குச் சமமானதாகும்.
நிலை இவ்வாறு இருக்க, பதினாறாவது நிதிக்குழு பரிந்துரைகளில், நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு முறையே 23.74 மற்றும் 13.27 சதவீத அளவில் உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு வெறும் 0.44 சதவீதம் என்ற மிகச் சிறிய உயர்வே வழங்கப்பட்டுள்ளது;
இது, ஒப்பிடத்தக்க மாநிலங்களுள் மிகவும் குறைவானதாகும். நாம் பெருந்தன்மையை எதிர்பார்க்கவில்லை. சமநிலையினை உறுதி செய்திடும் நியாயத்தை மட்டுமே கோரியிருந்தோம் என்பதை இங்கு மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன்.
பதினாறாவது நிதிக்குழுவும் அந்த வகையில் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது என்று பதிவு செய்துள்ளார்.