குஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு விளக்கம்...
குஜராத் மாநிலத்தைவிட தமிழ்நாடு அரசு அதிக வட்டி கட்டுவதாக வெள்ளை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று (ஜூன் 16) வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
அப்போது, வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன்கள் இரு மடங்கு அதிகரித்து, ரூ. 10 லட்சம் கோடியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திமுக அரசின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது குஜராத் மாநிலத்தைவிட தமிழ்நாடு அரசு அதிக வட்டி கட்டுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து பேசியதாவது:
”குஜராத்தில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து, காலை உணவுத் திட்டம், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியங்கள், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதுபோன்ற நலத்திட்டங்கள் குஜராத்தில் செய்யவில்லை. இதன் காரணமாகதான் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையில் செலவு செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் இலவச சிலிண்டர்கள், இலவச மின்சாரம், வேலை இல்லாதவர்களுக்கு உதவித் தொகை, கூட்டுறவு கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500 என பல வாக்குறுதிகளை அளித்துள்ளீர்கள். இதையெல்லாம் மூலதனச் செலவீனத்தில் இருந்து செலவு செய்வோம் என்று கூறுனீர்களா? சிங்கப் பெண் அதிரடிப் படை மூலதனச் செலவீனத்தில் இருந்துதான் தொடங்குனீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.