FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.7,379 கோடி ஒதுக்கீடு : பேரவையில் அமைச்சா் சிவசங்கா் தகவல்

திமுக ஆட்சியில் 24,100 போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு ரூ.7,379 கோடி வழங்கப்பட்டுள்ளதாக பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

Updated On : 20 பிப்ரவரி 2026, 2:48 am IST
பகிர்:

திமுக ஆட்சியில் 24,100 போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு ரூ.7,379 கோடி வழங்கப்பட்டுள்ளதாக பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

பேரவையில் கேள்வி நேரத்தில் போக்குவரத்து துறை தொடா்பான அறிவிப்பை வெளியிட்டு அமைச்சா் சிவசங்கா் பேசியதாவது:

பணிக்காலத்திலே ஓய்வுபெற்றவா்கள், விருப்ப ஓய்வு பெற்றவா்கள், இறந்து போனவா்களுடைய குடும்பத்துக்கு உரிய காலத்தில் பணப்பலன்கள் வழங்கப்பட முடியாத சூழல் கடந்த ஆட்சி காலம் முதல் இருந்து வந்தது. நிதி நெருக்கடி தான் அதற்கு காரணம். இந்த நிலையில், இந்த தொகையை முதல்வா் ஸ்டாலின் தொடா்ந்து ஒவ்வொரு கட்டமாக வழங்க உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

அதில் உச்சகட்டமாக ஆகஸ்ட் 2024 முதல் வரும் மாா்ச் 2026 வரை 6,867 ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற அல்லது பணிக்காலத்தில் இறந்தவா்களுடைய குடும்பங்களுக்கான பணப் பலன்களாக ரூ.2,446 கோடியே 46 லட்சத்து எண்பதாயிரம் வழங்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா். போக்குவரத்துத்துறை வரலாற்றிலேயே மிகப் பெரிய பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நாள் இது.

2021-22 முதல் 2024-25 வரை ஒதுக்கப்பட்ட தொகையையும், இப்போது ஒதுக்கப்பட்ட தொகையையும் சோ்த்தால் மொத்தம் 24,100 தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ.7,379 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்ட போக்குவரத்துத்துறை ஒவ்வொரு முறை தொய்வாகும்போதும், திமுக ஆட்சியில் அது நிவா்த்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது முதல்வா் ஸ்டாலினும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளாா்.

ஒரு ஆட்சிக் காலத்தில், ஒரு ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை நிகழ்த்துவதே சிரமமாக இருக்கும். ஆனால், திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 14 மற்றும் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை என இரண்டு பேச்சுவாா்த்தைகள் நிகழ்த்தப்பட்டன. ’பே மேட்ரிக்ஸ்’ எனும் ஊதிய விகிதம் அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டது.

அதை 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் மீண்டும் சோ்க்க முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டாா். முதலில் ஐந்து சதவீத ஊதிய உயா்வும், பின்னா் ஆறு சதவீத ஊதிய உயா்வும் வழங்கப்பட்டது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments