அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி்யை பாமக தலைவர் அன்புமணி சந்தித்துப் பேசி வருகிறார்.
தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில், அதில் மேலும் சில கட்சிகளை இணைக்க அந்த கூட்டணி முயற்சித்து வருகிறது.
பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. அன்புமணிக்கு கட்சியில் எந்த அதிகாரமும் இல்லை என்று ராமதாஸ் கூறி வருகிறார். மறுபுறம் தேர்தல் ஆணையம், கட்சியின் சின்னத்தை அன்புமணிக்கே ஒதுக்கியுள்ளது.
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இருவரிடையே சமாதானம் பேசி கூட்டணியில் சேர்க்க முயற்சிக்க வேண்டும் என்று இபிஎஸ்ஸுக்கு அமித் ஷா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக பாமக தலைவர் அன்புமணி இன்று(புதன்கிழமை) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து பேசி வருகிறார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இருந்த நிலையில் வரும் பேரவைத் தேர்தலிலும் அது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராமதாஸும் விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கவுள்ளதாக கூறி வருகிறார். இந்த நிலையில்தான் என்டிஏ கூட்டணியில் சேர்வது குறித்து அன்புமணி, இபிஎஸ்ஸுடன் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பாமகவில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.