காணும் பொங்கல் பண்டிகையையொட்டி பொது இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகரக் காவல்துறையினர் செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. நாளைமுதல் தொடர்ந்து மூன்று நாள்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
மூன்றாவது நாளான காணும் பொங்கல் பண்டிகை (ஜன. 17) அன்று அதிகளவிலான மக்கள் கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களில் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில், சென்னை மாநகரக் காவல்துறையினர் கடற்கரை மற்றும் பொது இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
சென்னை காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்தியில் முக்கியமானவை:
சென்னை பெருநகர காவல்துறை, 16,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் புறவழிச் சாலை, ஜிஎஸ்டி சாலை மற்றும் இதர சாலைகளில் இருசக்கர வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்பில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் ஏடிவி ( ATV - All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்படுவர்.
கடற்கரை உயிர் காக்கும் பிரிவின் (Anti Drowning team) காவல் ஆளிநர்கள் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் தீவிரமாக கண்காணிக்கப்படுவர்.
அவசர உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.
குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட கைகளில் கட்டப்படும் பேண்ட் வழங்கப்படும்.
மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் (Drone Camera) மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படும்.
உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள், 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள்.
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள்.
பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை காவல் உதவி மையங்கள் மற்றும் 3 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள்.
சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.