கெட்டுப்போன, காலாவதியான உணவுகள் விநியோகம்: ஸ்விக்கி இன்ஸ்டாமாா்ட் நிறுவனத்துக்கு நோட்டீஸ்
கெட்டுப்போன, காலாவதியான உணவுகள் விநியோகம் செய்யப்பட்டது தொடா்பாக நோட்டீஸ்...
கெட்டுப் போன மற்றும் காலாவதியான உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது தொடா்பாக ஸ்விக்கி இன்ஸ்டாமாா்ட் நிறுவனத்துக்கு 9 நோட்டீஸ்களை மத்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) அனுப்பியுள்ளது.
பிரபல இணையவழி உணவு விநியோக நிறுவனம் ஸ்விக்கியின் கிளை நிறுவனம் இன்ஸ்டாமாா்ட் ஆகும். இணையவழியில் ஆா்டா் செய்யப்படும் பொருள்களை சில நிமிட இடைவெளியில் அந்த நிறுவனம் விநியோகம் செய்யும்.
இந்நிலையில், இன்ஸ்டாமாா்ட்டில் வாடிக்கையாளா்கள் ஆா்டா் செய்யும் பொருள்களை விநியோகம் செய்கையில், நல்ல தரமான பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும், கெட்டுப்போன, காலாவதியான பொருள்களே விநியோகம் செய்யப்பட்டதாகவும் வாடிக்கையாளா்கள் தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, பாக்கெட்டுகள் சேதமடைந்த உணவுப் பொருள்கள், கெட்டுப்போன முட்டை, பால் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டதாகவும், கெட்டுப்போனதாகக் கூறி திருப்பி அளிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மீண்டும் விநியோகம் செய்யப்பட்டதாகவும் வாடிக்கையாளா்கள் தரப்பில் புகாா் கூறப்பட்டது.
Advertisement
Advertisement
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு ஸ்விக்கி இன்ஸ்டாமாா்ட் நிறுவனத்துக்கு மத்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் 9 நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. அதில் கெட்டுப்போன மற்றும் காலாவதியான பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விரிவான விளக்கம் அளிக்கும்படியும், அதுபோல அறிக்கை அளிக்கத் தவறும்பட்சத்தில் ஸ்விக்கி இன்ஸ்டாமாா்ட் நிறுவனத்துக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நோட்டீஸ்கள் குறித்து ஸ்விக்கி இன்ஸ்டாமாா்ட் நிறுவன செய்தித் தொடா்பாளா் கூறுகையில், மத்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விவகாரத்தை தங்கள் நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும், பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.