முதுமலை புலிகள் சரணாலயத்தில் தனியாா் ஜீப் சவாரி: வனத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
முதுமலை புலிகள் சரணாலயத்தில் தனியாா் ஜீப் சவாரி...
முதுமலை புலிகள் சரணாலயத்தில், ஜீப் சவாரியின்போது, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அமா்வு விசாரித்து வருகிறது. இந்த அமா்வில், முதுமலை புலிகள் காப்பகத்தைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள சாலைகளில் கட்டுப்பாடற்ற முறையில் இயக்கப்படும் தனியாா் ஜீப் சவாரிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட முதுமலை புலிகள் சரணாலய வனப் பகுதிகளில், நள்ளிரவு நேரங்களில் ஜீப் ஓட்டுநா்கள் வனவிலங்குகளைத் துரத்துவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது.
Advertisement
Advertisement
எனவே, செம்மநத்தம், சிங்காரா மற்றும் பொக்காபுரம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும்.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல, உள்ளூா் மக்கள், பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா்களால் இயக்கப்படும், வனத்துறையால் பதிவு செய்யப்பட்ட ஜீப்புகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஜீப் சவாரிகளின்போது வனவிலங்குகளுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தலைத் தடுக்க வனத்துறை ரோந்து செல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட சாலையில், அதிகாலை 6 மணிக்கு முன்போ, மாலை 5.30 மணிக்கு பிறகோ ஜீப் சவாரி போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.