தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக பணீந்திர ரெட்டி நியமனம்!
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தற்காலிக தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.பணீந்திர ரெட்டி நியமனம் தொடர்பாக...
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தற்காலிக தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கட்டடங்கள், மனைப்பிரிவு திட்டங்களை ஒழுங்குப்படுத்துவதற்கான தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகப் பதவி வகித்த கே.ஞானதேசிகன் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், சிவ்தாஸ் மீனா மற்றும் அதன் உறுப்பினர்களான டாக்டர் எல். சுப்ரமணியன், சுகுமார் சிட்டிபாபு, எம். கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் டி. ஜெகந்நாதன் ஆகியோர் ஒட்டுமொத்தமாக பதவி விலகினர். இதையடுத்து தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் சட்டம், 2016-ஆவது பிரிவு 82-இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஆணையத்தை தற்காலிகமாக கலைப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
Advertisement
Advertisement
புதிய நிர்வாகக் குழு அறிவிப்பு
இந்த நிலையில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரங்களையும், பொறுப்புகளையும் கவனிப்பதற்காக மூன்று பேர் கொண்ட புதிய இடைக்கால குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.பணீந்திர ரெட்டி தலைமையில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஏ. நசீர் அகமது, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரிஷ் தக்கர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூவர் குழு 6 மாதங்களுக்கோ அல்லது புதிய ஆணையம் அமைக்கப்படும் வரை, எது முன்னதாக நிகழ்கிறதோ அதுவரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய இடைக்கால நிர்வாகக் குழுவின் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.பணீந்திர ரெட்டி, அறநிலையத் துறை ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையர், உள்துறைச் செயலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Panindra Reddy appointed as Chairperson of the Tamil Nadu Real Estate Regulatory Authority....
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.