தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி புகாரில் புதிய தலைமுறை நெறியாளர் விஜயன் அலைக்கழிப்பு: கம்யூனிஸ்ட் கண்டனம்
தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி புகாரில் புதிய தலைமுறை நெறியாளர் விஜயன் அலைக்கழிப்பு குறித்து...
தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான புகாரில் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் திருவல்லிக்கேணி காவல் துறை புதிய தலைமுறை தொலைகாட்சி நெறியாளர் விஜயனை அலைக்கழித்து வருவதற்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான புகாரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் திருவல்லிக்கேணி காவல் துறை புதிய தலைமுறை தொலைகாட்சி முதுநிலை ஆசிரியர் விஜயனை அலைக்கழித்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது.
Advertisement
Advertisement
குற்றச்சாட்டு எழும் போது, அது தொடர்பாக விசாரணை மேற்கொள்வது காவல் துறையின் சட்டம் சார்ந்த கடமையாகும். ஆனால், அந்த விசாரணை சட்ட முறைகளையும், நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் பின்பற்றி நடத்தப்பட வேண்டும்.
முதுநிலை செய்தி ஆசிரியர் விஜயன் நெறிப்படுத்தி வரும் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வோர் அனைவரும் அவரோடு தொடர்பில் இருப்பதும், இவரும், அவர்களை தொடர்பு கொள்ளுவதும் தொழில் சார்ந்த பணி என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு விஜயன் மீது குற்றம் சுமத்த முயல்வது அதிகார அத்துமீறலாகும்.
இது தொடர்பாக காவல் துறையினர் வெளியிட்ட விளக்கக் குறிப்பு அபத்தமானது. கடந்த கால ஆட்சிகளில் நடந்த அத்துமீறல்களை பட்டியலிட்டு, இன்றைய தவறை நியாயப்படுத்தும் வகையில் வலிந்து பேசுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை அச்சுறுத்தப்படுவதும், கருத்து சுதந்திரத்தை பறிப்பதும் மற்றும் மறுப்பதும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானது.
இத்தகைய நடவடிக்கைகளை தவெக அரசு கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், நெறியாளர் விஜயன் அலைக்கழிப்படுவதை கைவிட்டு, அவர் சுதந்திரமாகப் பணியாற்றும் சூழலை உறுதிப்படுத்திட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
CPI condemns the harassment of Puthiya Thalaimurai anchor Vijayan regarding the complaint of a conspiracy to topple the TVK government
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.