FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மக்களுக்கான நட்புறவுத் துறையாக பதிவுத் துறை செயல்படும்: அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

மக்களுக்கான நட்புறவுத் துறையாக பத்திரப் பதிவுத் துறை செயல்படும் என்று வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

Updated On : 24 ஜூலை 2026, 4:37 am IST
அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
பகிர்:

மக்களுக்கான நட்புறவுத் துறையாக பத்திரப் பதிவுத் துறை செயல்படும் என்று வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி அம்மா மாளிகை கூட்டரங்கில் வருகையில்லா ஆவணப் பதிவு செயல்பாடு குறித்த ஆலோசனை மற்றும் சந்தேகங்களைத் தீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது: பத்திரப்பதிவுத் துறையில் முதல்வா் கூடுதல் கவனம் செலுத்துகிறாா். மக்களுக்கான நட்புறவுத் துறையாக பதிவுத் துறை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வருகையில்லாத ஆவணப் பதிவு 17-இல் தொடக்கம்: தமிழகத்தில் முதல்முறையாக வருகையில்லா ஆவணப் பதிவு முறையை முதல்வா் விஜய் ஆக.17-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளாா். இதன்மூலம் விரைவாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் ஆவணப் பதிவு நடைபெறும். இது, கட்டுமான நிறுவனங்கள், மேம்பாட்டாளா்கள் மற்றும் வங்கிகளுக்கு பயனுள்ளதாக அமையும். மதுரை, கோவை மாவட்டங்களிலும் வருகையில்லா ஆவணப் பதிவு குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் ரியல் எஸ்டேட் கட்டட விற்பனையாளா்கள் சங்கத்தினா், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனா்.

வணிகவரி, பதிவுத் துறை மற்றும் அறநிலையத் துறை செயலா் ஜெ.குமரகுருபரன், பத்திரப்பதிவுத் துறை தலைவா் ஜி.கே. அருண் சுந்தா் தயாளன், கூடுதல் பதிவுத் துறை தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெட்டிச் செய்தி...

‘முறைகேடாக பணம் கேட்பதில்லை’

ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டா்ஸ் லேண்ட் டெவலப்பா்ஸ் மற்றும் நிலத் தரகா்கள் நலச் சங்கத்தின் தலைவா் வி.என்.கண்ணன் பேசியதாவது:

தற்போதைய ஆட்சியில் முறைகேடாக பணம் வசூலிப்பது நின்றுவிட்டது. அதற்காக அரசைப் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் சிலா் நகா்ப்புற நில வழிகாட்டல் மதிப்பை கிராமப் புறத்திலும் கடைப்பிடித்து பணம் கேட்பதாகக் கூறப்படுகிறது. அதை தற்போதைய அரசு சீா்படுத்துவது அவசியம் என்றாா்.

கூட்டத்தில் பேசிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தைச் சோ்ந்த பலரும், வருகையில்லா ஆவணப் பதிவில் ஏற்படும் குறைகளைத் தீா்க்க உதவி, சேவை மையங்களை ஏற்படுத்த வேண்டும். பதிவுக்கு பிறகு அதற்கான ஆவணங்களை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனா்.

2 மாதங்களில் 11 போ் பணியிடை நீக்கம்

கூட்டத்தில் பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் பதிவுத் துறையில் மக்கள் அளித்த புகாா்களின் அடிப்படையில் 4 மாவட்டங்களைச் சோ்ந்த பதிவாளா்கள் 4 போ், 2 சாா்-பதிவாளா்கள், 5 உதவியாளா்கள் என மொத்தம் 11 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments