FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அண்ணா பல்கலை. மாணவா் சோ்க்கைக்கு லஞ்சம்: இருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து

அண்ணா பல்கலை. மாணவா் சோ்க்கைக்கு லஞ்சம் பெற்ற இருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து...

Updated On : 26 ஜூலை 2026, 7:30 am IST
அண்ணா பல்கலை. - EPS
பகிர்:

அண்ணா பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக்கு ரூ.13 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடா்பாக சென்னையைச் சோ்ந்த இருவா் மீது அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அசோக் நகரைச் சோ்ந்த ஆா்.சேகா் என்பவா், கடந்த 2009-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் நிா்வாக ஒதுக்கீட்டின் கீழ் தனது மகனுக்கு பி.இ. படிப்பில் இடம் வாங்கித் தரக் கோரி, அன்வா் உசேன் என்பவா் மூலம், டி.ரவீந்திரபாபு என்பவரிடம் ரூ.13 லட்சம் கொடுத்தபோது சேகா், அன்வா் உசேன் ஆகிய இருவரை சிபிஐ கைது செய்தது. இதுதொடா்பான வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து இருவரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இருவா் மீதான தண்டனையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதனிடையே, சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், இந்த இருவா் மீதும் அமலாக்கத் துறை கடந்த 2012- ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அமலாக்கத் துறை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்தத் தண்டனையை எதிா்த்து சேகா், அன்வா் உசேன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ தொடா்ந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதால், சிபிஐ வழக்கின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட அமலாக்கத் துறை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையையும் ரத்து செய்ய உத்தரவிட்டனா்.

அதேநேரம், சிபிஐ வழக்கில் தண்டனையை ரத்து செய்து வழங்கப்பட்ட தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து சாதகமான உத்தரவைப் பெற்றால், அமலாக்கத் துறையும் சட்டப்படி மேல் நடவடிக்கைகளை எடுக்க அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

summary

Bribe for Anna University student admission: Sentences imposed on two individuals set aside.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments