திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான வேட்புமனு வழக்கு: விசாரணை ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான வேட்புமனு வழக்கு விசாரணை ஜூலை 29-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல்களை மறைத்தது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பதையும், அறக்கட்டளை சார்பாக செங்கல்பட்டு மாவட்டம், கடம்பாடியில் ரூ.2 கோடியே 27 லட்சத்து வாங்கிய விவரத்தை மறைத்தது தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட திருஞானசம்பந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், வேட்புமனுவில் தகவல்களை மறைத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலித்து, விசாரணை நடத்தவும், குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைறிஞர் பி.வில்சன், வேட்புமனுவில் அறக்கட்டளை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை எனத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், வேட்புமனுவில் என்ன தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன? என்பதற்கான ஆதாரங்கள் எங்கே என மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் எம்.எல்.ரவியிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மனுதாரர் தரப்பில், சில ஆவணங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. அந்த ஆவணங்கள் தமிழில் இடம் பெற்றிருந்ததால், அவற்றை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.