திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? தவெகவுக்கு ஆதரவா? துரை வைகோ பேட்டி
துரதிருஷ்டவசமாக உதய சூரியனில் போட்டியிட்டதால் தவெகவை ஆதரிக்க முடியாத சூழல் என துரை வைகோ பேசியது குறித்து...
திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து பொழுக்குழு கூட்டி முடிவு எடுக்கப்படும் என மதிமுக எம்.பி., துரை வைகோ இன்று (ஜூன் 1) தெரிவித்தார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு திருச்சிக்கு தவெக தலைவர் விஜய் இன்று பயணம் மேற்கொண்டு, வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சென்னையில் இருந்து திருச்சி சென்ற முதல்வர் விஜய்க்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி எம்.பி., துரை வைகோ முதல்வர் விஜய்யை பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் துரை வைகோ பேசியதாவது:
''மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை மதிக்க வேண்டும். விஜய்க்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை அவகாசம் கொடுத்துதான் ஆக வேண்டும். பிறகுதான் விமர்சனங்களை முன்வைக்க முடியும்.
துரதிருஷ்டவசமாக உதய சூரியனில் போட்டியிட்டதால் தவெகவை ஆதரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா? என்பதை பொதுக்குழு கூட்டி முடிவு செய்யப்படும். தனிப்பட்ட முறையில் நான் கருத்து கூற முடியாது.
ஜூன் 27 ஆம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தவெக ஆதரவு நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும்.
ஒரு கட்சியின் உறுப்பினர் ராஜிநாமா செய்துவிட்டு மற்றொரு கட்சிக்குச் செல்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை. அது கட்சித்தாவல் சட்டத்தில் வராது.
விமான நிலையம் தொடர்பாக முதல்வர் விஜய்யை சந்தித்துப் பேசினேன். ஓடுதள விரிவாக்கத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன்.
இதற்கு நிலமும் கையகப்படுத்தப்பட்டு விட்டது. இந்திய விமான நிலையங்களில், வேகமாக வளரக்கூடிய விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் உள்ளது'' என துரை வைகோ பேசினார்.