இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் விளக்கம்!
இடைத்தேர்தலில் போட்டி குறித்து திருமாவளவன் விளக்கம்...
தமிழ்நாடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
தவெக தலைமையிலான அமைச்சரவையில் திருமாவளவன் இடம்பெற வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ. வன்னி அரசு அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இதனிடையே, முதல்வர் ஜோசப் விஜய் ராஜிநாமா செய்த திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பாக முகநூல் நேரலையில் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
Advertisement
Advertisement
அவர் பேசியதாவது:
”திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியா என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். 100 சதவிகிதம் இடைத்தேர்தலில் எந்த தொகுதிகளிலும் போட்டியிட மாட்டேன். அதற்கான வாய்ப்புகள் இல்லை. அதுதொடர்பாக முதல்வர் விஜய்யிடம் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன்.
அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இல்லை. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. கட்சியின் முன்னணி தோழர்கள் என்னை வற்புறுத்தியது உண்மைதான். ஆனால், எனக்கு உடன்பாடு இல்லை.
தேர்தலுக்குப் பின்னர் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லாமல் சிதறிவிட்டது. அதற்கான உண்மையான காரணத்தை கண்டறிய முயற்சிக்காமல், கடைசி நேரத்தில் நாம் எடுத்த முடிவை மட்டுமே கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்த விமர்சனங்களை நான் பொருட்படுத்தவில்லை என்றாலும், இயக்க தோழர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
திருமாவளவனுக்கு பதவி ஆசை இருந்திருந்தால், முதல்முறையாக எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் பதவியை ராஜிநாமா செய்திருப்பாரா என்று எனக்காக வாதாட இங்கே யாரும் இல்லை. பதவி ஆசை இருந்தால், பாஜக அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு வந்த நிலையில், அதனை ஏன் திருமாவளவன் உதறினார் என எனக்காக வாதாட இங்கே யாரும் இல்லை.
அதிமுக அணியில் சேர்ந்தால் இத்தனை இடங்கள் பெற முடியும். தவெக அணியில் சேர்ந்தால் துணை முதல்வர் பதவிகூட கிடைத்திருக்கும் என்ற அழைப்புகள் வந்தது. ஆசை இருந்திருந்தால், அதிமுக கூட்டணியில் சேர்ந்திருக்க முடியும். திருமாவளவன் அப்படி சேர்ந்தாரா எனக் கேட்க யாரும் இல்லை” எனப் பேசியுள்ளார்.