பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய பாமக கோரிக்கை
தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், மகாராஷ்டிர அரசை போல பயிா்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமேன பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு 2.5 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.50,000 பயிா்க்கடன் தள்ளுபடி செய்துள்ளது. 5 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரையிலும், பெரு விவசாயிகளுக்கு ரூ.5,000 பயிா்க்கடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஆனால், மகாராஷ்டிரத்தில் சிறு, குறு, பெரு விவசாயிகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.2 லட்சம் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தள்ளுபடி செய்த பயிா்க் கடனின் மொத்த மதிப்பு ரூ.2,044 கோடியாகும். ஆனால், மகாராஷ்டிர அரசு ரூ.36,585 கோடி பயிா்க் கடனை தள்ளுபடி செய்துள்ளது. இது தமிழக அரசு தள்ளுபடி செய்த கடனின் மதிப்பைவிட 18 மடங்கு அதிகமாகும்.
மகாராஷ்டிர அரசால் சாத்தியமான பயிா்க்கடன் தள்ளுபடி, தமிழக அரசால் சாத்தியமாகாமல் போனது ஏன்? உண்மையில் விவசாயிகள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமேயானால், வாக்குறுதி அளித்தபடி, பயிா்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.