மின்துறை முறைகேடுகள்; ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது எப்படி? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
மின்வாரிய ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது எப்படி? என மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளதைப் பற்றி...
மின்வாரிய ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது எப்படி? என மின்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் தலைமையில் புதிதாக ஆட்சியமைத்த பின்னர், அனைத்துத் துறைகளிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திமுக ஆட்சிக் காலத்தில் மின்சார வாரியத்தில் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி கடன் மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், ரூ. 8 லட்சத்திலான மின்மாற்றிகள் அதிக விலைக்கு வாங்கியதாகவும், கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக, மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதைத்தொடர்ந்து, சென்னை அண்ணாசாலையில் இயங்கி வரும், தமிழ்நாடு மின்வாரியத் தலைமையக அலுவலகத்தில் முக்கியக் கோப்புகள் காணாமல் போயுள்ளதாக இன்று காலை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
அந்தக் கோப்புகளில் நிலக்கரி வாங்கியது, டெண்டர்கள், மின்மாற்றிகள் கொள்முதல் தொடர்பான தரவுகள் இருக்கலாம் என்றும், சுமார் 18 ஹார்டு டிஸ்க்குகள் மாயமானதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோப்புகளில் காகிதத்தின் அடிப்படையிலான நகல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்தாலும், அனைத்து முக்கியமான மின்னணு ஆவணங்கள் மட்டும் திருடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மின்துறை முறைகேடுகள், மின்வாரியத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற திருட்டு குறித்து மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், இன்று (ஜூன் 4) காலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பல ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானதாக கடந்த மாதம் புகார்கள் கிடைத்திருக்கின்றன. இந்தச் சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன. விசாரணையில் இருக்கும் போது எதுவும் பேசமுடியாது. காணாமல்போன ஹார்ட் டிஸ்க்குகள் குறித்து ஆய்வு செய்ய கூறியிருக்கிறோம். கணினிகளில் இருக்கும் தரவுகளை பேக்-அப் எடுத்து வைக்க உத்தரவிட்டிருக்கிறோம்.
அதிகளவிலான ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த ஊழியர் விவரங்கள், நிலக்கரி இறக்குமதி தொடர்பான தரவுகள் திருடப்பட்டுள்ளன. ஏற்கனவே மின்மாற்றி வாங்கியதில் ஊழல் கண்டறியப்பட்டு, இந்த விவகாரம் குறித்த தகவல்கள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன்பின்னர்தான் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன. சூரிய ஒளி மின்னுற்பத்தி தொடர்பான பேக்-அப் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் ஒரு சில அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசை தனிப்பட்ட யார் ஒருவராலும் மிரட்டிப்பார்க்க முடியாது. யார் தவறான நபர்களோ அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். தனிநபர் ஈடுபட்டால், முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பல்வேறு ஊர்களுக்குச் சென்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
பல ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போவதாக ரிப்போர்ட் வந்துள்ளது. முக்கிய கோப்புகளை பத்திரப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். ஹார்டு டிஸ்க் திருடப்பட்டால் தப்பித்துவிடலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கலாம்.
அவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. திருடப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணையில் தெரியவரும். யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவித நோக்கமில்லாமல் யாரும் ஹார்ட் டிஸ்க்குகளைத் திருடியிருக்க மாட்டார்கள். விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மாயமான கோப்புகள், ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட ஆவணங்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.
தொடரும் அதிகளவிலான மின்தடையைத் திசைத்திருப்புவதற்கு இந்தச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துப் பேசிய நிர்மல்குமார், “மின்தடைக்கும் இந்த ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல்போன சம்பவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. காற்றாலைகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக மின்தடைகள் ஏற்படுகின்றன.
மின்நிறுத்தம் தொடர்பாக முன்னதாகவே, மின்வாரிய இணையதளத்திலும், எக்ஸ் பக்கத்திலும் தெரிவித்து வருகிறோம். மின்நிறுத்தத்துக்கும் ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. கடந்த ஆட்சியில் இருந்த டெண்டர் தொடர்பான விவரங்கள் மாயமாகியுள்ளன. இந்தத் திருட்டுச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
முன்னாள் மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஏதேனும் சந்தேகங்கள் இருக்கின்றனவா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், “செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில்தான் மின்மாற்றி வாங்கியதில் ஊழல் நடந்திருக்கிறது. இதுதொடர்பான விவரங்களை சிபிஐக்கு வழங்கியிருக்கிறோம். நாளுக்கு நாள் மின் தேவை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால், போதுமான அளவில் துணை மின் நிலையங்கள் இல்லாதது போன்றவைகளால் அதிகளவிலான மின்தடையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது” என்றார்.
Minister for Electricity R. Nirmal Kumar has provided an explanation regarding how the Electricity Board's hard disks went missing and how irregularities occurred within the department.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.