தவெக அரசு மீது கோபத்தில் மக்கள்! முதல்வர் விஜய் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்! பிரேமலதா
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
தேர்தல் பிரசார நேரம்போல இல்லாமல் ஆக்கப்பூர்வமாக முதல்வர் விஜய் பேசவும் செயல்படவும் வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விருத்தாசலம் எம்எல்ஏ அலுவலகத்தை பிரேமலதா விஜயகாந்த் இன்று(ஜூன் 4) திறந்துவைத்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
Advertisement
Advertisement
“தேர்தல் பிரசாரம் போல இல்லாமல், ஆக்கப்பூர்வமாக முதலமைச்சர் விஜய் பேசவும் செயல்படவும் வேண்டும். விவசாயிகளுக்காக கடன் தள்ளுபடி அறிவித்தார்கள். எந்த விவசாயியாவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? நிறைவேற்ற முடியும் என்றால் மட்டும்தான் வாக்குறுதி தர வேண்டும். நீங்கள் வாக்குறுதி கொடுத்து ஜெயித்து ஆட்சிக்கு வந்துவிட்டால் கண்டிப்பாக மக்கள் கேள்வி கேட்பார்கள். தமிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். சிங்கப்பெண் படையை விரைந்து தொடங்க வேண்டும்.
நூறு நாள் வேலைத் திட்டம் எப்போதும்போல தொடர வேண்டும், விவசாயிகள் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், முதியவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வீடு தேடி வழங்க வேண்டும்.
தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. இங்கே பக்கத்தில் ஒரு டாஸ்மாக் கடையை மூடுவோம் என்று சொன்னார்கள். இதுவரை மூடவில்லை. நேற்று விருத்தாசலம் தொகுதி முழுக்கச் சென்றேன். ஒரு கடைகூட மூடப்படவில்லை என்று மக்கள் என்னிடம் சொன்னார்கள்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். விவசாயிகள், பெண்கள், சட்டம் - ஒழுங்கு என பல பிரச்னைகள் இருக்கின்றன" என்றார்.