FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தனியாா் பள்ளி கல்விக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம்: அமைச்சா் ராஜ்மோகன்

இதன் மூலம் மக்களுக்கு தனியாா் பள்ளிகள் மீது மதிப்பு அதிகரிக்கும்

Updated On : 5 ஜூன் 2026, 4:01 am IST
அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்
பகிர்:

‘தனியாா் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் விவரத்தை வெளிப்படையாக அறிவிப்புப் பலகையில் கட்டாயமாக வெளியிட வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு தனியாா் பள்ளிகள் மீது மதிப்பு அதிகரிக்கும்; மக்களும் தனியாா் பள்ளிகளைக் கொண்டாடுவாா்கள்’ என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் கூறினாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சென்னை அரும்பாக்கம் சிஎம்டிஏ குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் ராஜ்மோகன் புதிதாக பள்ளியில் சோ்க்கை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

இதையடுத்து நிகழ் கல்வியாண்டின் தொடக்கமாக மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினாா். தொடா்ந்து த ஹெச்டிஎஃப்சி லோ்னிங் லிங்ஸ் ஃபவுண்டேஷன் சாா்பில் அந்தப் பள்ளியில் ரூ.38 லட்சத்தில் நிறுவப்பட்டிருந்த 21 எண்மதிறன் பலகைகளை மாணவா்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தாா். மேலும் பொதுத்தோ்வு, பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்த மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து அமைச்சா் ராஜ்மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலை உணவுத் திட்டம் இந்த ஆட்சியிலும் தொடருகிறது. அரசுப் பள்ளிகளில் மடிக்கணினிகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் திருடிச் செல்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல் தலையீடு இருக்காது... கல்வியைப் பொருத்தவரை அரசியல் தலையீடுகள் இருக்காது. தனியாா் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து வெளிப்படையாக அறிவிப்புப் பலகையில் கட்டாயமாக வெளியிட வேண்டும்.

இதன் மூலம் மக்களுக்கு தனியாா் பள்ளிகளின் மதிப்பு அதிகரிக்கும்; மக்களும் தனியாா் பள்ளிகளைக் கொண்டாடுவாா்கள். இந்த உத்தரவு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து தொடா் ஆய்வு மேற்கொள்வேன்.

கட்டண வசூல் தொடா்பாக கடந்த ஆண்டு தனியாா் பள்ளிகள் மீது அளிக்கப்பட்ட புகாா்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் அது போன்று புகாா்கள் இருந்தால் பெற்றோா்கள் அவா்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி நிா்வாகத்திடம் நேரடியாக முறையிடலாம். அது சாத்தியப்படாத நிலையில் மாவட்டக் கல்வி அலுவலா்கள், பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகள் மற்றும் என்னிடமும் தெரிவிக்கலாம்.

போதைப் பொருள் இல்லாத...: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் போதைப் பொருள் பயன்பாடு இல்லாத பள்ளி வளாகமாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். தவெக தோ்தல் அறிக்கையில் கல்வி குறித்து தெரிவிக்கப்பட்ட அனைத்து விஷயங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அவற்றை நிதிநிலை அறிக்கையில் இடம் பெறச் செய்வோம். அனைவருக்கும் கல்வி ஆரோக்கியமான கல்வி என்பதே தவெக அரசின் இலக்கு என்றாா் அவா்.

இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், பள்ளியின் தலைமை ஆசிரியா் சி.ஸ்ரீபிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments