முகப்பு
தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு அமைப்பு!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முறைகேடுகளை விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 5 ஜூன் 2026, 7:51 pm IST
திருச்செந்தூர் கோயிலில் பேட்டியளித்த அமைச்சர் ரமேஷ். - (கோப்புப்படம்)
பகிர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முறைகேடுகளை விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்காக பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக கடந்த சில மாதங்களாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன.

அந்தப் புகார்களைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கடந்த மே 29 ஆம் தேதி அதிகாலை ஆய்வுப் பணிக்காகச் சென்றுள்ளார்.

Advertisement

Advertisement

அவர், திருச்செந்தூர் கோயில் அறநிலையத் துறை அதிகாரிகள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், காரை கோயிலுக்கு வெளியே நிறுத்திவிட்டு, உதவியாளருடன் முகக்கவசம் அணிந்து கோயிலுக்குச் சென்ற அவர், தனது உதவியாளரை அனுப்பி, விரைவாக தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று அர்ச்சகர்கள், ஊழியர்களிடம் விசாரிக்க கூறியுள்ளார்.

அப்போது, அமைச்சர் என்று தெரியாமல், விரைவாக தரிசனம் செய்ய வைப்பதாக கூறி சண்முகவிலாச மண்டபம் வாசலில், தலைக்கு ரூ. 1,000 என அமைச்சருடன் சேர்த்து மொத்தம் 4 பேருக்கு ரூ. 4,000 லஞ்சமாக கேட்டுள்ளனர்.

பணம் இல்லை எனக் கூறிய அமைச்சர், அர்ச்சகரின் ஜி-பே எண்ணுக்கு ரூ. 4,000 அனுப்பியுள்ளார். அமைச்சர் என்றே தெரியாத நிலையில், அந்த அர்ச்சகரை அமைச்சர் ரமேஷ் கையும், களவுமாக ஆதாரத்துடன் பிடித்தார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முறைகேடுகளை விசாரிக்கவும், ரூ.100 டிக்கெட், அன்னதானம், தங்குமிடம் முன்பதிவு போன்ற சேவைகளை ஆய்வு செய்து குழு அறிக்கை சமர்ப்பிக்கவும் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், கோ.ஜெயப்பிரியா, தங்கம், பாஸ்கரன், கார்த்திகேயன், பகவதி, மாயக்கண்ணன் உள்ளிட்ட ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆய்வுக்குழுவானது வருகிற ஜூன் 20 ஆம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

summary

A six-member committee has been constituted to investigate irregularities at the Thiruchendur Subramania Swamy Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.