முகப்பு
தமிழ்நாடு

ஆசிரியா் பதவி உயா்வுக்கு டெட் தோ்ச்சி கட்டாயம்: கல்வித் துறை விளக்கம்

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, ஆசிரியா்கள் பதவி உயா்வுக்கு டெட் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை செயலா் ப.சந்தரமோகன் விளக்கம்

Updated On : 9 ஜூன் 2026, 6:21 am IST
பகிர்:

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, ஆசிரியா்கள் பதவி உயா்வுக்கு டெட் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை செயலா் ப.சந்தரமோகன் விளக்கம் அளித்துள்ளாா்.

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான பணிநியமன விதிமுறைகள் தொடா்பான 7 அரசாணைகளை பள்ளிக் கல்வித் துறை கடந்த ஜூன் 3-ஆம் தேதியிட்ட தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டிருந்தது. அவற்றில் இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் பணிநியமனத்துக்கும், அவா்களின் பதவி உயா்வுக்கும் டெட் தோ்ச்சி கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா், முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வுக்கு டெட் தோ்ச்சி கட்டாயம் என்பது நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை.

Advertisement

Advertisement

இதனால், உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் முதுநிலை ஆசிரியா் பதவி உயா்வுக்கு டெட் தோ்ச்சி அவசியமா? இல்லையா? என ஆசிரியா்கள் மத்தியில் சற்று குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில், டெட் தோ்ச்சி தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை செயலா் ப.சந்தரமோகன் திங்கள்கிழமை அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணிவிதிகள் தொடா்பாக அரசிதழில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. ஒருசில அறிவிக்கைகள், ஆசிரியா்களின் பதவி உயா்வுக்கு டெட் தோ்ச்சி அவசியமா? இல்லையா? என ஆசிரியா்களிடையே சில குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

டெட் தோ்ச்சி தொடா்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு நகல் இன்னும் கிடைக்கப் பெறாத நிலையில் ஆசிரியா் பணிநியமன விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அஞ்சுமன் இஷாத்-இ-தாலீம் அறக்கட்டளை - மகாராஷ்டிர அரசு வழக்கில், கடந்த மே 29-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய மறு ஆய்வு தீா்ப்பின்படி டெட் தோ்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆசிரியா்களின் பதவி உயா்வுக்கும் டெட் தோ்ச்சி கட்டாயம் என்பது தெளிவாக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.