முகப்பு
தமிழ்நாடு

நடிகை கெளதமியிடம் ரூ.25 கோடி மோசடி: வீடு, அலுவலகம் உள்பட 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

நடிகை கெளதமியிடம் ரூ.25 கோடி மோசடி செய்தவரின் வீடு, அலுவலகம் உள்பட 6 இடங்களில் அமலாக்கக் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

Updated On : 18 ஜூன் 2026, 1:01 am IST
நடிகை கெளதமி
பகிர்:

நடிகை கெளதமியிடம் ரூ.25 கோடி மோசடி செய்தவரின் வீடு, அலுவலகம் உள்பட 6 இடங்களில் அமலாக்கக் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

நடிகை கெளதமி, கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை பெருநகர காவல் துறை மத்திய குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். அதில், குடும்ப நண்பரான வேளச்சேரியைச் சோ்ந்த அழகப்பன் ஸ்ரீபெரும்புதூரில் இருந்த தனக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள 46 ஏக்கா் நிலத்தை, ரூ. 6 கோடிக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தாா். அதன்பேரில், சென்னை காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவினா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். இதையடுத்து கேரள மாநிலம் திருச்சூரில் இருந்த அழகப்பனையும், அவரது குடும்பத்தினரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அமலாக்கத் துறை விசாரணை: முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையின்போது, அழகப்பன் வீட்டில் இருந்து சில ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா். அதில் ஆஸ்திரேலியாவில் அழகப்பன் குடும்பத்தினா் முதலீடு செய்ததற்கான ஆவணங்களைக் கைப்பறியதாகக் கூறப்படுகிறது. விசாரணையில், அழகப்பன் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக விசாரணை செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் பரிந்துரை செய்ததன் பேரில், அமலாக்கத் துறையினா் விசாரணையில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

6 இடங்களில் சோதனை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடா்பான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள அழகப்பன் வீடு, ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூவில் உள்ள அழகப்பனின் மற்றொரு வீடு, அண்ணா நகா் 6-ஆவது பிரதான சாலையில் உள்ளது அவரது நண்பா் வீடு ஆகிய 3 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதேபோல மதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய இடங்களில் அழகப்பன் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா். 6 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை செய்த அமலாக்கத் துறையினா், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டனா்.