திடீரென பெய்யும் மழை, நீண்ட வெய்யில்: பருவமழைக்கு வில்லனாகும் எல்-நினோ! தமிழகத்துக்கு?
திடீரென பெய்யும் மழை, நீண்ட வெய்யில் போன்றவை கவலையை ஏற்படுத்தும் நிலையில் பருவமழைக்கு வில்லனாகும் எல்-நினோ பற்றி.
ஜூன் 4ஆம் தேதி கேரளத்தில் தென் மேற்குப் பருவமழை தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
வடமேற்கு, கிழக்கு மற்றும் தென்னிந்திய பகுதிகளில் கடந்த வாரங்களில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்திருந்தாலும் மேற்குப் பகுதி மாவட்டங்களில் பருவமழை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
ஜூன் மாதத்தின் முதல் பகுதியில், மகாராஷ்டிரம் வழக்கமாகப் பெறும் மழையில் வெறும் 26 சதவிகிதம் அளவுக்குத்தான் பெற்றிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதுபோல, இந்திய வானிலை ஆய்வு மையமும் புதன்கிழமை, நாட்டின் எந்தப் பகுதிக்கும் பெரிய அளவில் கனமழைக்கான எச்சரிக்கையை விடுக்கவில்லை. பல பகுதிகளில் பச்சையாகவே காணப்படுகின்றன.
இந்த தகவல்கள் தற்போது தென்மேற்கு பருவமழை குறித்த கவலையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
மெட்ரோசாட் என்ற செயற்கைக் கோள் புகைப்படங்கள் இந்தியாவின் வடக்கு வங்கக் கடல் பகுதியில் மேகக் கூட்டங்கள் சூழ்ந்திருப்பதைக் காட்டுகிறது. இது, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிகார் போன்ற மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் ஓரளவுக்கு மழை கிடைப்பதை காட்டுகிறது.
அரபிக் கடல் பகுதிகளில் மேகக் கூட்டங்கள் உருவாகவில்லை. இதனால், மேற்கு மாநிலங்கள் போதுமான மழையை பெறவில்லை என்பதையே காட்டுகிறது.
மேலும், அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் செயற்கைக்கோள் படங்களைப் பார்ப்பதன் மூலம் இதற்கான காரணங்களைக் கண்டறியலாம்.
ஜூன் மாத மத்திய பகுதியில் வடக்கு நோக்கி நகர்ந்து இந்தியாவிற்குள் ஈரப்பதத்தை ஈர்க்கும் வெப்பமண்டல இடை இணைப்பு மண்டலம் (ITCZ), தற்போது குறைந்த வேகத்துடன் நகர்வதை இவை காட்டுகின்றன.
இது சில பகுதிகளில் பருவமழை தீவிரமடைவதைத் தடுக்கிறது. மேலும், எல் நினோ உருவாகும் அறிகுறிகளும் தென்படுகின்றன. இது இந்தியாவின் மீது வெப்பச்சலனம் ஏற்படுவதைக் குறைத்து, நீண்ட வறண்ட காலத்திற்கும் சீரற்ற மழைக்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
இஸ்ரோவின் இன்சாட் (INSAT) செயற்கைக்கோள்களும் கிழக்கு இந்தியாவில் தீவிரமான இடியுடன் கூடிய மழையையும் வலுவான வெப்பச்சலனத்தையும் காட்டுகின்றன. ஆனால், மத்தியப் பிரதேசம், விதர்பா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் மேகமூட்டம் குறைவாகவே உள்ளன.
எல்-நினோ நிலை என்ன?
தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு, இந்த ஆண்டு பருவமழை இயல்பை விடக் குறைவாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. எல்-நினோ செயல்பாடுகளும் இந்தியாவின் பருவமழை பலவீனத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இது நாட்டின் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சரும் எச்சரித்துள்ளார்.