சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு இரு பாலர் அந்தஸ்து!
சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு இரு பாலர் அந்தஸ்து அளித்தது குறித்து...
184 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு இரு பாலர் அந்தஸ்து வழங்கியது.
சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு இரு பாலர் அந்தஸ்து வழங்கியுள்ளதாக அறிவிக்கை வெளியிட்டுள்ள கல்லூரி நிர்வாகம், அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "இந்தியாவின் மிகப் பழைமையான மற்றும் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான பச்சையப்பன் கல்லூரி, அதன் 184 ஆண்டுகால சிறப்புமிக்க பயணத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது. கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு இரு பாலர் அந்தஸ்து வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
1842 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பச்சையப்பன் கல்லூரி, பல தலைமுறைகளாக கல்விச் சிறப்பு, சமூகப் பொறுப்பு மற்றும் கல்விச் சேவையின் அடையாளமாக விளங்கி வருகிறது. இரு பாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது, கல்லூரியின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளதுடன், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, சமத்துவம் மற்றும் சமுதாயத்தின் வளர்ந்து வரும் கல்வி எதிர்பார்ப்புகளுக்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
Advertisement
Advertisement
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, மாணவிகளுக்கும் இந்நிறுவனத்தின் வாயில்களைத் திறந்து வைத்து, தரமான உயர்கல்விக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பன்முகத் தன்மையும் உயிர்ப்பும் நிறைந்த கல்விச் சூழலை உருவாக்கும். கல்லூரியின் பாரம்பரியத்தையும் பெருமைமிகு மரபையும் பாதுகாத்தபடியே, நவீன கல்வி மதிப்புகளுக்கு இம்முயற்சி உறுதுணையாக அமைகிறது.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவை, பச்சையப்பன் கல்லூரியின் நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் வரவேற்றுள்ளனர். இந்தச் சாதனை, பல்வேறு தரப்பினரின் நீண்டகால முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.
கல்லூரியின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் அங்கீகரித்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அனுமதியை வழங்கிய தமிழ்நாடு அரசு மற்றும் உயர்கல்வித் துறைக்கு கல்லூரி தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.
புதிய அத்தியாயத்தை நோக்கி முன்னேறும் பச்சையப்பன் கல்லூரி, அறிவு, நற்பண்பு மற்றும் தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கான தனது பணியில் தொடர்ந்து உறுதியாக இருக்கும். இரு பாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது ஒரு நிர்வாகச் சாதனை மட்டுமல்ல; மாறாக, இரண்டு நூற்றாண்டுகளாக சமூகத்திற்கு சிறப்பாகச் சேவை செய்துவரும் இந்தப் பெருமைமிகு கல்வி நிறுவனத்தின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தியபடி, முன்னேற்றமிக்க எதிர்காலத்தை உருவாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
Tamil Nadu government granted co-educational status to Chennai Pachaiyappa's College
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.