கோயில் உபரி நிதியிலிருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டும் அறிவிப்புகள் நீக்கம்! தமிழக அரசு அரசாணை
கோயில் உபரி நிதியிலிருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டும் அறிவிப்புகள் நீக்கம்...
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், சென்னை அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரா் கோயில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், சென்னை மேற்கு மாம்பலம் பாஷ்யகார ஆதிசென்ன கேசவப்பெருமாள் கோயில் உள்பட 46 கோயில்களின் உபரிநிதியின் மூலம் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளுக்கான அறிவிப்பை சட்டப்பேரவை அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் உபரி நிதி மூலம் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு சட்டப்பேரவை அறிவிப்பின் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் கோயில் உபரி நிதியிலிருந்து திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளுக்கு தடை விதித்தது.
அதன் அடிப்படையில், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படாத நிலையில் அவ்வறிவிப்புகளை சட்டப்பேரவை அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்வதற்கு கோயில்களிடமிருந்து முன்மொழிவுகள் வரப்பெற்றன. எனவே, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் கோயில் அறங்காவலா் குழு மற்றும் தக்காா் தீா்மானத்தின்படியும், இணை ஆணையா்களின் முன்மொழிவுகளை ஏற்றும் கோயில்களின் உபரிநிதி மூலம் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளை சட்டமன்ற அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்யுமாறு இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அரசை கேட்டுக் கொண்டுள்ளாா்.
Advertisement
Advertisement
அதை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், சென்னை அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரா் கோயில், சென்னை மேற்கு மாம்பலம் பாஷ்யகார ஆதிசென்ன கேசவப்பெருமாள் கோயில் உள்பட 46 கோயில்களின் உபரிநிதி மூலம் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகள் சட்டப்பேரவை அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.