மின் துறையில் 70,000 காலிப் பணியிடங்கள்! இந்த ஆண்டு 15,000 இடங்கள் நிரப்பப்படும்! நிர்மல்குமார்
மின்சாரத் துறையில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் அமைச்சர் பேசியது...
மின்சாரத் துறையில் 70 ஆயிரத்துக்கும் அதிகமாக காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் இந்த ஆண்டில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள், என மொத்தம் 401 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜூன் 24) நடைபெறும் நிகழ்வில் முதல்வர் விஜய் வழங்கினார்.
நிகழ்வில் மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேசுகையில், "மின்சாரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
Advertisement
Advertisement
மின்சாரத் துறை தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 'மின்சாரத் துறையில் 70 ஆயிரத்துக்கும் அதிகமாக காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த ஆண்டில் 15,000 பணியிடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது' என்று முதல்வரிடம் கூறினோம். உடனடியாக அவர் ஒப்புதல் அளித்துவிட்டார். 25 ஆண்டுகளாக இந்த துறையில் இது நடந்ததே இல்லை. இத்தனை காலிப் பணியிடங்கள் ஒரே நேரத்தில் நிரப்பப்பட்டது கிடையாது.
கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரத் துறை சீரழிந்து கிடக்கிறது. அதை சரிசெய்வதற்கான நேரம் வந்துவிட்டது. இப்போது இல்லை எனில் எப்போதும் சீரமைக்க முடியாது. நாளை மின்சாரத் துறை சார்ந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இங்கு 401 பேருக்கும் நானே பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று முதல்வர் கூறினார். முதல்வர் என்ன சொல்கிறாரோ அதை முதல்வர் செய்வார். மக்களுக்கு பயந்து மட்டுமே இந்த அரசு செயல்படும். வேறு யாருக்கும் பயப்படாது" என்றார்.
இந்த விழாவில் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு முதல்வர் விஜய் மேடையில் இருந்து இறங்கிவந்து பணி நியமன ஆணை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
70,000 Vacancies in the Power Sector; 15,000 Posts to be Filled This Year: Nirmal Kumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.