சட்டப்பேரவை மரபை மீறவில்லை! திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனா
சட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை என ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து...
திமுக அரசு செய்யாததை தவெக அரசு செய்து வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (ஜூன் 25) தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்தநாளையொட்டி சென்னையில் அவரின் சிலைக்கு தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
Advertisement
Advertisement
''திட்டங்களையும் கருத்துகளையும் கொள்கைகளையும் மட்டும்தான் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவரை மீறி திமுக உறுப்பினர்கள் கேலி, கிண்டல் பேசுகின்றனர்.
சட்டப்பேரவையில் இதுவரை ஆளும் கட்சியின் முதல்வர் பேசியது மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. எதிர்க்கட்சிகள் பேசியதையும் நேரலையில் கொண்டு வருகிறோம். வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதால் தவெக இதைச் செய்கிறது.
சமூக நீதி கணக்கெடுப்புக்கான அறிவிப்பை தவெக வெளியிட்டுள்ளது.
கர்நாடகத்தில், பிகாரில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை தமிழகத்தில் திமுக செய்யவில்லை. திமுக செய்யாததை தவெக செய்கிறது.
ஒவ்வொரு அவையிலும் பொறுமையாக கவனிக்கிறார் முதல்வர். ஆளுநர் உரைக்கு எல்லா கட்சித் தலைவர்களும் பேசுகின்றனர். அப்போது நாங்கள் குறுக்கிடவில்லை. எங்கள் மீது குற்றம் சாட்டும்போது அதற்கு பதில் அளிக்கிறோம்.
பெண்கள் பிரச்னைக்கு தவெகவினர்தான் காரணம் எனக் கூறுகின்றனர். இப்படி ஆதாரமில்லாமல் பேசும்போது நாங்கள் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறொம். சட்டப்பேரவையின் மரபை தவெக மீறவில்லை.
தவெகவில் அமைச்சர்கள் மட்டும்தான் பேசுவார்கள்; முதல்வர் பேசமாட்டார் என்ற பிம்பத்தை உருவாக்குகின்றனர். அதற்கு நாங்கள் பதில் கூறுகிறோம்.
மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதன் காரணமாகத்தான், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேசுவதையும் நேரலையில் ஒளிபரப்புகிறோம். இதனைச் செய்யவேறு எந்தவொரு முதல்வராலும் முடியாது.
வெளிப்படைத்தன்மையை தவெக உருவாக்கியுள்ளது. மக்கள் கண்காணிப்பில் சட்டப்பேரவை நடைபெறுகிறது. இது மிகப்பெரிய வெற்றி.
தவெக அரசு நேர்மையாக இருக்கிறது. பொதுப்பணித் துறை, பள்ளிக் கல்வித் துறை, நெடுஞ்சாலை டெண்டரில் திமுக ஆட்சியில் ஊழல் இல்லை என ஒருவரால் கூற முடியுமா? விரைவில் சட்டப்பூர்வமாகவும் இவை நிரூபிக்கப்படும்'' எனக் குறிப்பிட்டார்.
TVK is doing what the DMK did not minister Aadhav Arjuna
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.