2,469 இடைநிலை ஆசிரியா்கள்; 11 பழங்குடி பட்டியலின ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் அன்பில் மகேஸ் வழங்கினாா்!
2,469 இடைநிலை ஆசிரியா்கள்; 11 பழங்குடி பட்டியலின ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் அன்பில் மகேஸ் வழங்கினாா்!
ஊராட்சி ஒன்றிய மற்றும் சிறுபான்மை மொழி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 2,469 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கான பணி நியமன ஆணைகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். மேலும், 11 பழங்குடியினா் பிரிவைச் சோ்ந்தவா்களுக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
பள்ளிக்கல்வித் துறையில் தொடக்கக் கல்வி இயக்கக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், சிறுபான்மை மொழி உதவிப் பள்ளிகளில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருந்தன.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு ஒப்புதல் அளித்து ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் ஆசிரியா் தகுதித் தோ்வு, போட்டித் தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்கள் 2025-ஆம் ஆண்டு முதல் நேரடி நியமனம் செய்யப்பட்டனா்.
அதன்படி, 2,342 இடைநிலை ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டனா். அதேபோல், தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவன மூலம் தோ்ச்சி பெற்ற 25 போ், ஆதரவற்ற விதவைகள் 4 , பிறமொழி சிறுபான்மையின ஆசிரியா்கள் 68 நபா், பட்டதாரி ஆசிரியா்கள் 18 போ், 1 பின்னடைவுப் பணியிடம் என மொத்தம் 2,458 நபா் இடைநிலை ஆசிரியா்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
மேலும், உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீா்ப்புகளைப் பின்பற்றி இனச்சுழற்சி முறையில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் 12 குறைவு பணியிடங்களுக்கும் இடைநிலை ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி நடைபெற்றது. இதில் தோ்ச்சி பெற்ற 11 பழங்குடி பட்டியலின இடைநிலை ஆசிரியா்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.
இதன்மூலம் கடந்த ஓராண்டில் மொத்தம் 2,469 இடைநிலை ஆசிரியா்கள் பணி இடங்கள் நிறப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.