தமிழகத்தில் உயர் கல்வியை இலவசமாக்க வேண்டும்! முதல்வருக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வேண்டுகோள்!
தமிழகத்தில் அனைவரும் உயர் கல்வி கற்கும் வகையில் அதை இலவசமாகக் கற்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் அனைவரும் உயர் கல்வி கற்கும் வகையில் அதை இலவசமாகக் கற்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னையில் துறைமுக மேற்குப் பகுதி 59, 59 அ ஆகிய வட்ட திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 73ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பாரிமுனை பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் மனிதநேய விழா 38 எனும் தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக வட்டச் செயலர் - தலைமைச் செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். சென்னை மேயர் ஆர்.பிரியா சிறப்பு விருந்தினர்களை கெüரவித்தார்.
விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன்: அரசியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதியின் வாரிசாக மட்டும் வரவில்லை; கட்சியில் படிப்படியாக கடுமையான உழைப்பால் தன்னை வளர்த்துக் கொண்டு உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.
தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதே நேரத்தில் 50 நாடுகளில் உயர்கல்வி இலவசமாக கற்றுத்தரப்படுகிறது. அதில் சில நாடுகளில் வெளிநாட்டவருக்கும் உயர் கல்வி இலவசமாக கற்பிக்கப்படுகிறது. அதனால், தமிழகத்திலும் உயர் கல்வியை இலவசமாகக் கற்கும் நிலையை முதல்வர் ஏற்படுத்த வேண்டும். உயர் கல்வி அதிகமாக உள்ள நாடுகளில் பொருளாதாரம் உயரும்.
முன்னாள் தேர்வாணையக் குழு உறுப்பினர் லட்சுமணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராக இருந்தபோதே அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவர் மிசா காலத்தில் பல கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அவர் படிப்படியாகவே அரசியலில் வளர்ந்து, தியாகத்தால் உயர்ந்துள்ளார். தமிழின் உரிமை, தமிழர்களின் உரிமைகளைக் காப்பவராகவும், தமிழகத்தின் முன்னேற்றத் தேரை முன்னின்று இழுத்துச் செல்பவராகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.
கவிஞர் புதுக்கோட்டை தங்கம் மூர்த்தி: கலைஞர்கள், கவிஞர்களைக் கொண்டாடும் அரசை எந்தக் காலத்திலும் யாராலும் வீழ்த்த முடியாது. உலகத் தமிழர்கள் அனைவரையும் காக்கும் கவசமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார் என்றார்.
நிகழ்ச்சியில் நாகை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எம்ஜிகே நிஜாமுதீன், திமுக வர்த்தக அணித் தலைவர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம், சட்டக் கதிர் ஆசிரியர் வி.ஆர்.எஸ்.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக ஊடகப் பிரிவு நிர்வாகி தமிழன் பிரசன்னா தொகுத்து வழங்கினார். வட்டச் செயலர் பிரபாகரன் நன்றி தெரிவித்தார்.
பிரமிப்பை ஏற்படுத்தும் சாதனைகள் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நான்கரை ஆண்டு கால சாதனைகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன' என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாழ்த்தரங்கத்தில் அவர் பேசியதாவது: கடந்த ஐந்தாண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து 1,725 நாள்களில் 8,585 நிகழ்ச்சிகளில் 173 முறை பயணித்து பங்கேற்றுள்ளார். தமிழக மாவட்டங்களில் அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று 44 லட்சத்து 44 ஆயிரத்து 721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
மேலும் 15,000 அரசுக் கோப்புகளில் கையொப்பமிட்டுள்ளார். தமிழகத்தில் தொழில் தொடங்க 1,229 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.12 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடு பெறப்பட்டு, 35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால், தமிழகம் உள்நாட்டு உற்பத்தியில் 11.19 சதவீதம் என்ற இரு இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது.
வீடு தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் 37,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 20 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். இந்திய அரசுப் பணியில் அரசுப் பள்ளி மாணவர் தேர்ச்சி பெற்றதற்கு "நான் முதல்வன்' திட்டமே காரணமாகும். அவரது நான்கரை ஆண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியல் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
"இதனை இதனால் இவன் செய்வான் என்றாய்ந்து' என வள்ளுவர் கூறுவதைப் போல எதை யாரிடம் ஒப்படைப்பது என்பதை நன்கு அறிந்தவர் முதல்வர். ஆகவேதான் அவர் இந்து சமய அறநிலையத் துறையை பி.கே.சேகர்பாபுவிடம் ஒப்படைத்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டில் தமிழகத்தில் பாழடைந்த கோயில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. அதில் 4,000 கோயில்களில் குடமுழுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.8,000 கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்டு அந்தந்தக் கோயில்களில் ஒப்படைத்துள்ளார்.
மூத்தோரை மதிக்கும் முதல்வரின் பண்பு பாராட்டத்தக்கது. எந்த மாவட்டத்துக்குச் சென்றாலும், அங்கிருக்கும் மூத்த திமுக தலைவர்களை நேரில் சென்று நலம் விசாரிக்கும் அவரது செயல்பாட்டைப் பார்த்து அவர்கள் வியந்து மகிழ்கிறார்கள். கட்சியில் இருந்து விலகி பல விமர்சனங்களை முன்வைத்த நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டைப் போற்றும் விதத்தில் அவருக்கு சிலை நிறுவ முற்பட்டதை பாராட்டாமல் இருக்க முடியாது என்றார் அவர்.