செம்மரக் கடத்தல்! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த வனத்துறை!
சுமார் 500 கிலோ செம்மரக்கட்டைகளுடன் இருந்த காரை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 500 கிலோ செம்மரக் கட்டைகளை ஆந்திர மற்றும் தமிழக வனத்துறையினர் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ஆந்திர வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தமிழக பதிவு எண் கொண்ட காரை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஆந்திர வனத்துறையினரிடமிருந்து தப்பித்த செம்மரக் கடத்தல்காரர்கள், காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றனர்.
அதிவேகமாக சென்ற காரை, ஆந்திர வனத்துறையினர், பின் தொடர்ந்து துறத்திச் சென்றனர்.
மேலும், அவர்கள் ஆந்திர எல்லையில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழைந்த நிலையில், தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பரதராமி சோதனைச் சாவடியில் தமிழக வனத்துறையினர் காரை, தடுத்து நிறுத்த முயன்றபோது, அங்கிருந்து தப்பிய கார், வேகமாக குடியாத்தம் நோக்கிச் சென்றது.
சினிமா பாணியில் ஆந்திர மற்றும் தமிழக வனத்துறையினர் காரை சேசிங் செய்துள்ளனர்.
அப்போது, குடியாத்தம் அருகே பாக்கம் பகுதியில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்துள்ளது. காரில் இருந்த 3 பேர் அங்கிருந்து தப்பிவிட்ட நிலையில், சுமார் 500 கிலோ செம்மரக்கட்டைகளுடன் இருந்த காரை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த இருவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னரே அவர்கள் யார்? அவர்கள் எந்த ஊரில் இருந்து யாருக்கு செம்மரக் கட்டைகளை கடத்திச் சென்றார்கள் என்ற விவரம் தெரியவரும்.