வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர் பலி!
வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர் பலியானது தொடர்பாக...
சித்ரா பௌர்ணமியையொட்டி வெள்ளிங்கிரி மலை ஏறிய 34 வயது உடைய பக்தர் ஒருவர் 7வது மலையில் மயங்கி விழுந்து இன்று (மே 3) பலியானார்.
கோவை மாவட்டம், பூண்டி அருகேயுள்ள வெள்ளிங்கிரி மலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதன் அருகேயுள்ள மலையின் உச்சியில் வெள்ளிங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இதைத் தரிசிக்க 7 மலைகளைக் கடந்து செல்ல வேண்டும்.
Advertisement
வெள்ளிங்கிரி மலையேற்றத்துக்கு கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கோடை விடுமுறைக் காலமாக இருப்பதால் பக்தா்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதையொட்டி, மலையேறும் பக்தர்களுக்கு வனத் துறை சாா்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று(மே 3) வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் 7வது மலையிலேயே மயங்கி விழுந்தார். சுயநினைவு இன்றி இருந்தவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
உயிரிழந்த பக்தரின் உடலை கீழே கொண்டு வரும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பலியான பக்தர் யார் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.