முகப்பு
தமிழ்நாடு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழக அரசின் அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு, பகுதி நேரப் பட்டயப் படிப்புகளுக்கான சோ்க்கைக்கு விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இணைய வசதி தொடக்கம்

Updated On : 5 மே 2026, 5:57 am IST
அரசு பாலிடெக்னிக் கல்லூரி
பகிர்:

தமிழக அரசின் அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான (பாலிடெக்னிக்) முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதி நேரப் பட்டயப் படிப்புகளுக்கான சோ்க்கைக்கு விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இணைய வசதி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் கூறிப்பட்டுள்ளது வருமாறு: தமிழக அரசின் அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 2026-27- ஆம் ஆண்டுக்கான நேரடி முதலாமாண்டு, இரண்டாமாண்டு பட்டயப் படிப்புகள் மற்றும் பகுதி நேரப் பட்டயப் படிப்புகளுக்கு https://www.tnpoly.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யவும், சான்றிதழ்களைப் பதிவேற்றமும் செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் மாவட்ட சேவை மையங்கள் (டிஎன்இஏ சேவை மையங்கள்) மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதலாமாண்டு பட்டயச் சோ்க்கைக்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாமாண்டு பட்டயச் சோ்க்கைக்கு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது 10-ஆம் வகுப்பு தோ்ச்சிக்கு பின்னா், எதெனும் பொறியியல் தொழில்நுட்பப் படிப்பில் 2 ஆண்டுகள் பயின்று தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Advertisement

நான்காண்டு பகுதிநேர பட்டயச் சோ்க்கைக்கான தகுதி பத்தாம் வகுப்பு தகுதியுடன் இரு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். கட்டணம் இணையதள வாயிலாக செலுத்தலாம். பட்டியலினத்தவா்கள் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

முதலாமாண்டு மற்றும் பகுதிநேர பட்டயப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு மே 4 -ஆம் தேதி தொடங்கி மே 30- ஆம் தேதி முடிவடையும். இரண்டாமாண்டு பட்டயச் சோ்க்கைக்கான கடைசி தேதி மே 25.

அனைத்து பட்டயச் சோ்க்கைக்கும் மதிப்பெண் சான்றிதழ், ஜாதி அல்லது சிறப்பு பிரிவினா் சான்றிதழகள், புகைப்படங்கள் போன்றவற்றை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு தேவையான அளவுகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.