கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ் செய்த ஒரே வேலை நீக்குவதுதான்: சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!
செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தது குறித்து...
கடந்த 4 ஆண்டுகளாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி செய்த ஒரே வேலை நீக்குவதுதான் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகளை நீக்கி, 17 மாவட்டங்களுக்கான புதிய செயலாளர்களை எடப்பாடி கே. பழனிசாமி நியமித்தார்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
Advertisement
எங்களது கட்சிப் பதவிகளை பறிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை. எங்களை நீக்கிய அறிவிப்பு செல்லாது. அதிமுகவின் அடிப்படை கொள்கையே தீயசக்தி திமுக ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான்.
ஒற்றைத் தலைமை வேண்டும் என நிலைப்பாட்டை நாங்கள்தான் எடுத்தோம். அதற்கான தண்டனையை நாங்கள் அனுபவித்து வருகிறோம். சுயமாக அவர் ஒன்றும் பொதுச் செயலாளராகவில்லை, நாங்கள்தான் அவரைத் தேர்ந்தெடுத்தோம்.
கடந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி செய்த ஒரே வேலை நீக்குவது மட்டுமே. அவர் நீக்கியவர்கள் அனைவரும் இன்று பேரவையில் உறுப்பினராக உள்ளனர்.
என்றைக்கு பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்ந்தெடுதோமோ அன்றைக்கே, அதிமுக குடும்ப அரசியலுக்கு சென்றுவிட்டது.
அதிமுக செயற்குழு கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடுக்கப்பட்ட முடிவு. மக்களவைத் தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக முடிவு எடுத்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தை இன்று வரை சொல்லவில்லை.