சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?
சென்னையில் நிலவும் மிதமான வானிலை எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பது பற்றி..
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வந்தநிலையில், வெள்ளிக்கிழமையும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான தூறல் முதல் மழை வரை பெய்தது.
சனிக்கிழமை காலையிலும் மிதமான வானிலை காணப்படுகிறது. காலை 8 மணிக்கே பளிச்சென்று வந்துவிடும் சூரியனை இன்று 9 மணி வரை காணவில்லை.
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மே மாதத்தில் இயல்பான வெப்ப அளவை விட கிட்டத்தட்ட 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்ப நிலை குறைந்தே பதிவாகியிருந்தது.
Advertisement
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று வரை அதேப் பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு தீவிரமடையாதவரை அங்கேயே இருக்கும் என்றும் இதனால் சென்னைக்கு அவ்வப்போது லேசான தூறல் முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள நிலவரப்படி, இதேப்போன்ற வானிலை அடுத்த ஒரு சில நாள்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வெள்ளிக்கிழமை போலவே சனிக்கிழமையும் சென்னையின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.
அதேவேளையில், அடுத்த வாரம் காற்றின் திசை மாறுபாட்டால், வட தமிழகப் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.