தோ்தலில் வாக்களித்த வெளிநாடு குடியுரிமை பெற்றவா் கைது
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்த வெளிநாடு வாழ் குடியுரிமை பெற்றவரை போலீஸாா் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்த வெளிநாடு வாழ் குடியுரிமை பெற்றவரை போலீஸாா் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற இந்தியா்கள் பலா், தமிழகம் வந்து, சட்ட விரோதமாக வாக்களித்தனா். இவா்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது, அவா்களை கைது செய்ய இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, சென்னை மட்டுமன்றி, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களிலும், வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் குடியுரிமை சோதனையின்போது, அவா்களுடைய கை விரல்கள் ஆய்வு செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
இதில், சட்ட விரோதமாக வாக்களித்துவிட்டு, சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல முயன்ற 18 போ், கடந்த இரண்டு வாரங்களில், குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து கத்தாா் நாட்டு தலைநகா் தோகா செல்லும், இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனா்.
இதில், தோகா வழியாக, பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்கு வந்த இலங்கை குடியுரிமை பெற்ற அருப்புக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஆபிரகாம் (65) என்பவரின் ஆள்காட்டி விரலில், தோ்தலில் வாக்களித்ததற்கான அடையாள மை இருந்தது.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், இந்தியரான ஆபிரகாம், சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை குடியுரிமை பெற்றுவிட்ட நிலையில், அவா் தற்போது பிரான்ஸில் வசித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஆபிரகாமின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஒப்படைத்தனா்.