திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும்: அமைச்சர் அருண் ராஜ்
கோயில் திருவிழாக்கள், தேரோட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் அருண் ராஜ் பேச்சு...
கோயில் திருவிழாக்கள், தேரோட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் இன்று (மே 31) தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இன்று (மே 31) காலை அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் தேரை சாலைக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்ட போது, தேரின் சக்கரத்திற்கும் அருகில் இருந்த சுவற்றுக்கும் இடையில் சிக்கி 19 வயது இளைஞர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர்கள் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அருண் ராஜ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் இளைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
பின்னர் செய்தியாளர்களுடன் அமைச்சர் அருண் ராஜ் பேசியதாவது:
''திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. தேர் சக்கரத்திற்கும் சுவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டதால், அவரை மீட்பதில் சிக்கல் இருந்துள்ளது. திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக குமாரமங்கலம் அழைத்துச்செல்லும்போது உயிர் பிரிந்துள்ளது. இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு அரசு சார்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் கவனத்துக்கு இந்த சம்பவம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
தேர் இழுக்கும்போது பக்கவாட்டில் சக்கரத்துக்கு மிக அருகில் இருந்ததால் விபத்து நேர்ந்துள்ளது. எதிர்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.