முதல்வர் விஜய்யுடன் கைகோர்த்துச் சென்ற பாட்டி! விஜய் கொடுத்த கண்ணாடி விலை இவ்வளவா?
விவசாயி ஒருவருடைய வீட்டுக்கு முதல்வர் விஜய் சென்ற போது, அவரை வழியனுப்ப வந்த பாட்டி விஜய்யுடன் கைகோர்த்துக் கொண்டு வந்தது பற்றி..
மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய், அங்கிருந்து சேலம் திரும்பும் வழியில், சின்னக்காவூர் பகுதியில் விவசாயி ஒருவருடைய வீட்டுக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் உரையாடினார்.
சின்னக்காவூர் பகுதியில் முதல்வர் விஜய்யை வரவேற்கக் காத்திருந்த மக்களை சந்தித்துப் பேசிய விஜய், அங்கிருந்த விவசாயி ஒருவருடைய வீட்டுக்குச் சென்றார்.
முதல்வர் விஜய் வருகையால் அப்பகுதியே பெரும் பரபரப்பை அடைந்தது. முதல்வரை வரவேற்ற விவசாய குடும்பத்தினருக்கு, விஜய் பட்டு வேட்டி, சேலைகளை வழங்கினார்.
Advertisement
Advertisement
எந்தவிதமான விவசாயம் செய்கிறீர்கள், எவ்வாறு வருவாய் ஈட்டுகிறீர்கள் என்பது குறித்து விவசாய குடும்பத்தாரிடம் விஜய் கேட்டுள்ளார். அதற்கு, வீட்டுக்கு பின்னால் வாழை மரங்கள் நட்டு வளர்த்து வருகிறோம், அது ஒன்றே வாழ்வாதாரம் என்று கூறியிருக்கிறார்கள் விவசாய குடும்பத்தினர். மேலும் தங்களுக்கு வேறென்ன உதவிகள் தேவைப்படுகிறது என்பது குறித்தும் விவசாய குடும்பத்தாரிடம் விஜய் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
பிறகு, விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி முதல்வர் விஜய்யை வழியனுப்ப அவருடன் கைகோர்த்தபடி வந்தார். அவருக்கு பிரியாவிடை கொடுத்த முதல்வர் விஜய், தான் அணிந்திருந்த விலை மதிப்பு மிக்க கண்ணாடியை பாட்டிக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
ஒன்றாக கைகோர்த்தபடி வந்த போது, அங்குக் கூடியிருந்த மக்களுக்கு விஜய் கையசைத்ததோடு, பாட்டியையும் கையசைக்குமாறு கூறினார். உடனே பாட்டியும் முதல்வருடன் இணைந்து மக்களைப் பார்த்து கையசைத்ததைப் பார்த்த மக்கள் புன்னகையுடன் விஜய்க்கு கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முதல்வர் விஜய் அணிந்திருந்த கண்ணாடியை போட்டுக் கொண்டதும், பாட்டிக்கு மகிழ்ச்சியும் வெட்கமும் அதிகரித்தது. அந்தக் கண்ணாடியை அணிந்துகொண்டு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.
முதல்வர் விஜய் அணிந்திருந்த கண்ணாடி என்பதால், அக்கம் பக்கம் வீட்டில் உள்ள இளைஞர்கள், அந்த பாட்டியைப் பார்த்து ஒரு பக்கம் பொறாமை பட்டனர். பிறகு நெருங்கி வந்து கண்ணாடியை தாங்கள் அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பிறகு, சேலம் விமான நிலையம் செல்லும் வழியில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த மற்ற பெண்களிடமும் முதல்வர் விஜய் பேசி அங்குள்ள நிலைமை மற்றும் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.
The elderly woman who walked hand-in-hand with Chief Minister Vijay! Just how much did the glasses Vijay gave her cost?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.