முதல்வர் விஜய்யுடன் கர்நாடகம் செல்லப்போவது யார், யார்?
காவிரி விவகாரம் குறித்துப் பேச முதல்வர் விஜய்யுடன் கர்நாடகம் செல்லும் குழுவில் இடம்பெற்றிருப்போர் விவரங்கள்..
சென்னை: காவிரி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகம் செல்லவிருக்கும் நிலையில், அவருடன் செல்லப்போவது யார், யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு - கர்நாடகம் சார்பில், பேச்சுவார்த்தை நடத்த இதற்கு முன்பு, தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர், கர்நாடகம் சென்றிருந்த நிலையில், அவருக்குப் பின், தமிழக முதல்வர் விஜய் செல்வது பேசுபொருளாகியிருக்கிறது. அரசியல் கட்சிகள் எதிர்த்தாலும், பொதுவாக ஆதரவுதான் அதிகம் உள்ளதாகத் தெரிகிறது.
மேக்கேதாட்டு அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கும் இடையே பெரும் பிரச்னையாக உள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலும் இருக்கிறது. ஆனால், இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டப்பட்டால், இரு மாநில மக்களுக்குமே இது பெரும் நிம்மதியை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் முயற்சி எடுத்து வரும் நிலையில், அதனை தமிழகம் எதிர்த்து வருகிறது. இந்த சூழலில்தான் கர்நாடக முதல்வர் டி. சிவக்குமாருடன் - முதல்வர் விஜய் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காவிரி பிரச்னை தொடர்பாக வரும் திங்கள்கிழமை கர்நாடகம் செல்லும் முதல்வர் விஜய்யுடன் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலர், நீர்வளத்துறை செயலர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆகியோர் உடன் செல்கின்றனர் என்றும் தமிழகத்தில் மூத்த வழக்குரைஞர் உமாபதியும் கர்நாடகம் செல்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் முதல்வர் விஜய் தலைமையிலான குழு கர்நாடகம் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Who will be accompanying CM Vijay to Karnataka?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.