விஜய்தான் அடுத்த பிரதமர்; ராகுலே அமர வைப்பார்! தவெக எம்.எல்.ஏ. கருத்து!
முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று தவெக எம்.எல்.ஏ. மீண்டும் சர்ச்சைக் கருத்து...
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்தான் அடுத்த பிரதமர் என்று தவெக எம்.எல்.ஏ. கனிமொழி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
வரும் 2029 மக்களவைத் தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்தான் அடுத்த பிரதமர் என்ற தவெக நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்து விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.
இதனிடையே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெகவினர் ஆதரிக்கவில்லை என்றால், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வோம் என்று காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த சர்சைகளுக்கு மத்தியில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை தந்த கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தவெக எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், விஜய்தான் அடுத்த பிரதமர் என்று மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
”2029-ல் பிரதமர் வேட்பாளர் விஜய்தான். கடந்த 3 நாள்களாக இந்த விவாதம்தான் நடந்துகொண்டிருக்கிறது. 2025-ல் இதுதான் நடந்தது, 2026-ல் என்ன நடந்தது என்பதை நாடே பார்த்திருக்கும்.
2029-ல் பிரதமர் யார் என்பதை தில்லி முடிவு செய்யப் போவதில்லை. தமிழ்நாட்டில் இருந்துதான் முடிவு செய்யப் போகிறது. அதிர்ச்சியான அரசியலை நாடு பார்க்கப் போகிறது.
விஜய்யை முதல்வர் இருக்கையில் அமர வைத்தது ராகுல் காந்திதான். அதேபோல் 2029-ல் பிரதமர் இருக்கையிலும் விஜய்யை ராகுல் அமரவைப்பார். 2026-ல் கணித்தது நடந்தது, இதேபோல் 2029-ல் நடக்கும்” எனத் தெரிவித்தார்.
தவெக எம்.எல்.ஏ. கனிமொழி கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ள காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தாரகை கத்பட், “அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ராகுல்காந்திதான். முதலமைச்சர் விஜய்யும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளார். தவெக எம்.எல்.ஏ.க்கள் இன்னும் ரசிகர் மனப்பான்மையுடன் இருப்பதால், அவர்களது தலைவரின் பெயரை கூறுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Vijay will be the next Prime Minister; Rahul Gandhi will install him! TVK MLA's view.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.