ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பலி! முதல்வர் விஜய் இரங்கல், நிதியுதவி!
நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்த நிலையில் முதல்வர் விஜய் இரங்கல்..
நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்து நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
திருச்செங்கோடு அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவிகள், ஒரு கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முதல்வர் விஜய், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் 03.09.2026 அன்று மாலை, கல்லூரியில் பயின்றுவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வி சுபிதா (வயது 19), த/பெ. சேகர் என்ற மாணவி பள்ளியில் பயின்றுவரும் தனது சகோதரிகளான செல்வி நிவேதா (வயது 17), த/பெ. சேகர், செல்வி தனுஸ்ரீ (வயது 13), த/பெ. சேகர் மற்றும் செல்வி அபிநயா (வயது 12), த/பெ. ரமேஷ்பாபு ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் செல்லும்போது, தனியார் கல்லூரிப் பேருந்தில் மோதிய விபத்தில் செல்வி நிவேதா, செல்வி தனுஸ்ரீ மற்றும் செல்வி அபிநயா ஆகியோர் சம்பவ இடத்திலேயும், செல்வி சுபிதா என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவிகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Four female students from the same family lose their lives: CM Vijay offers condolences and financial aid
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.