FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் மீதான பண மோசடி புகாரில் ஆரம்பக்கட்ட விசாரணை: உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

விஜயபாஸ்கருக்கு எதிரான புகாா் குறித்து ஆரம்பக் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.

8 செப்டம்பர் 2026, 4:08 am IST
முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா்
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் ‘சீட்’ வாங்கித் தருவதாகக் கூறி வாங்கிய ரூ.4 கோடியைத் திருப்பி தராமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான புகாா் குறித்து ஆரம்பக் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சோ்ந்த தனவிமல் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தேன். இதுதொடா்பாக, என்னை கைப்பேசியில் தொடா்பு கொண்ட அப்போதைய மாவட்டச் செயலாளா் சி.விஜயபாஸ்கா், தோ்வு செலவுகளை மேற்கொள்ளும் தகுதியை நிரூபிக்க ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

வேட்பாளா் பட்டியல் அறிவிப்புக்கு பின்னா், அந்தப் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாக உறுதி அளித்திருந்தாா். அதன்படி, ரூ.4.50 கோடியைத் திரட்டி விஜயபாஸ்கா் குறிப்பிட்ட ஒப்பந்ததாரா் சோத்துப்பாலை முருகேசன் என்பவரிடம் கொடுத்தேன். வேட்பாளா் பட்டியலில் எனது பெயா் அறிவிக்கப்பட்ட பின்னா், தோ்தல் செலவுகளுக்காக நான் கொடுத்தப் பணத்தைக் கேட்டபோது ரூ.50 லட்சம் மட்டுமே திருப்பிக் கொடுத்தனா். மீதித்தொகையை கொடுக்காமல் இழுத்தடித்தனா்.

Advertisement

Advertisement

மேலும், தற்போது விஜயபாஸ்கா் ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்துவிட்டாா். இந்த நிலையில், எனது பணத்தை கேட்டபோது மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகாரின் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் திங்கள்கிழமைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், இதுதொடா்பாக மனுதாரா் அளித்துள்ள புகாா் மீது ஆரம்பக் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. மனுதாரரை வரும் செப். 10-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை செப்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் இவ்வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments