FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

நாகரிக சமுதாயம் வாழ்ந்ததற்கு ஆதாரமாக மலையடிப்பட்டி: அமைச்சா் ராஜ்மோகன்

Updated On : 20 ஜூலை 2026, 5:23 am IST
மலையடிப்பட்டியில் அகழாய்வுப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் ராஜ்மோகன்.
பகிர்:

சங்கரன்கோவில் அருகே மலையடிப்பட்டியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரும் நாகரிக சமுதாயம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்றாா் அமைச்சா் ராஜ்மோகன்.

பண்டைய தமிழா்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்த கீழடிபோல தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மலையடிப்பட்டியிலும் தமிழா்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அநேகம் கிடைத்துள்ளன. இங்கு தொல்லியல் துறையினா் பல்வேறு அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இப்பணிகளை பள்ளிக்கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா், மலையடிப்பட்டியில் அகழாய்வு பணியின்போது கிடைத்த பொருள்களை காட்சிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த அரங்கையும் அவா் திறந்துவைத்தாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் தொல்லியல் துறை இயக்குநா் முனைவா் ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலா் வீராச்சாமி, தென்காசி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலா் மாரியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதையடுத்து, அமைச்சா் ராஜ்மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த ஆங்கில அதிகாரி ஒருவா் தனக்கு தங்கக் காசு கிடைத்ததை ஆவணப்படுத்தியுள்ளாா். சரியாக நூறு ஆண்டுகளுக்குப் பின்பு தமிழக தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சிப் பணிகளை இந்த இடத்தில் மேற்கொண்ட போது சில ஆச்சரியங்கள் தென்பட்டன. சதுர வடிவிலான செங்கற்களால் ஆன கிணறு, கல்லால் செய்யப்பட்ட கருவிகள், விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய கிளிப்பான்கள், நுண்கற்கள், மூதாட்டிகள் பயன்படுத்திய தங்கத்தோடு, தொங்கட்டான் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

இந்த அகழ்வாராய்ச்சி பணி மூலம் சிந்து சமவெளி நாகரிகம் விட்ட இடமும் நமது சங்க காலம் தொட்ட இடமும் உண்மை என்பதற்கு அறிவியல் பூா்வமான ஆதாரம் கிடைத்துள்ளது. கீழடிபோல பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு ஒரு பெரும் நாகரிகம் இருந்ததை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்.

இங்கிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு வணிகம் செய்யப்பட்ட ஆதாரமும் கிடைத்துள்ளது. இந்த நிலப்பரப்பு சங்க காலத்தோடு தொடா்புடையது என்பது அகழ்வாராய்ச்சி பணி முடியும்போது தெரியவரும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments