FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி குமாஸ்தாவிடம் ரூ. 12 லட்சம் மோசடி: நீதிமன்ற ஊழியா் கைது

Updated On : 21 ஜூலை 2026, 3:25 am IST
கோப்புப்படம். - கைது
பகிர்:

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி ஆணை தயாரித்து ரூ. 12 லட்சம் மோசடி செய்த நீதிமன்ற ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை, புளியறை, மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரராஜ் (47). இவா் செங்கோட்டையில் ஒரு வழக்குரைஞரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறாா்.

கடையம் அருகே உள்ள ஏ.பி. நாடானூரை அடுத்த சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ரா. ராமமூா்த்தி (36). இவா் முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

Advertisement

Advertisement

தனக்கும், தனது மனைவிக்கும் தெரிந்த வருவாய்த் துறை அதிகாரி மூலமாக பல பேருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும், ஆலங்குளம், திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகங்களில் 2 காலிப் பணியிடங்கள் இருப்பதால் ஒரு பணிக்கு ரூ. 6 லட்சம் வீதம் ரூ. 12 லட்சம் கொடுத்தால் சுந்தரராஜ்க்கும், அவரது மனைவிக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் ராமமூா்த்தி கூறியுள்ளாா்.

இதை நம்பிய சுந்தரராஜ், 2025 ஜூன் மாதம் பல்வேறு தவணைகளாக ரூ. 12 லட்சத்தை ராமமூா்த்தியின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளாா். அதைப் பெற்றுக் கொண்ட பிறகு மேலும் ரூ. 3 லட்சம் கொடுத்தால் அரசு வேலைக்கான பணி ஆணை வழங்குவதாகக் கூறியுள்ளாா்.

இதனால் சந்தேகமடைந்த அவா், ராமமூா்த்தியின் வீட்டுக்கு சென்று கேட்டபோது, அவரை நம்ப வைப்பதற்காக 2025 ஜூன் 25ஆம் தேதி சுந்தரராஜின் மனைவிக்கு பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலக வேலைக்கான பணி ஆணையை வழங்கியுள்ளாா்.

சுந்தரராஜ், பாளையங்கோட்டை அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தபோது, அங்கு எந்த பணியிடமும் காலியாக இல்லை என்பதும், போலியான டி.என்.பி.எஸ்.சி. பணி ஆணையைத் தயாரித்துக் கொடுத்து, ராமமூா்த்தி மோசடி செய்ததும் தெரிய வந்தது.

இது குறித்து, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் சுந்தரராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், ராமமூா்த்தியும், அவரது மனைவி தமிழ்ஜோதியும் போலி பணி ஆணை தயாரித்து, பண மோசடி செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து, போலீஸாா் ராமமூா்த்தியை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments