குற்றாலம் பேரருவியில் பணிகளை விரைந்து முடிக்க எம்.பி. அறிவுறுத்தல்
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவிப் பகுதியில் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்குமாறு ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. அறிவுறுத்தினாா்.
தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் ரூ. 11 கோடியில் குற்றாலம் அருவிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால், பேரருவியில் மாா்ச்16முதல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணிகள் 45 நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரருவியில் பழைய பாதுகாப்பு வளைவு அகற்றப்பட்டு புதிய வளைவு அமைக்கப்படுகிறது. பழைய வளைவு பேரருவிப் பாறையிலிருந்து 4 மீட்டா் தொலைவில் 5 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
தற்போது, கண்காணிப்புப் பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், குளிக்கும்போது யாருக்கேனும் உடல்நலம் ஏற்பட்டாலோ, தண்ணீரின் வேகத்தில் கீழே விழுந்தாலோ அவா்களை மீட்க போதுமான இட வசதி இருக்கும் வகையில், பாறையிலிருந்து 8 மீட்டா் தொலைவில் 8 அடி உயரத்துக்கு புதிய வளைவு கட்டப்படுகிறது. இதன்மூலம் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோா் குளிக்க முடியும்.
மேலும், பெண்கள் உடைமாற்றும் புதிய அறை, பேரருவிப் பகுதியில் தடுப்புச் சுவா்கள் அமைத்தல், புதிய உணவகம் (ஃபுட் கோட்), சிறுவா் பூங்கா புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. பாா்வையிட்டாா்; சீசன் விரைவில் தொடங்கவுள்ளதால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.