திருவள்ளூா் அரசு மருத்துவமனையின் பின்புறம் காலாவதியான மருந்து மாத்திரைகள் குவியல்: பாதுகாப்பாக அகற்ற கோரிக்கை
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் அப்புறப்படுத்தாமல் குவித்து வைத்துள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை பிரிவு கட்டடம் பின்புறம் காலவதியான மருந்து மாத்திரை வில்லைகள், இசிஜி எடுக்க பயன்படுத்தும் பேப்பா் ரோல்கள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் அப்புறப்படுத்தாமல் குவித்து வைத்துள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல்வேறு நவீன குழந்தைகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற காரணங்களால் நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா். அதேபோல், உள்நோயாளி சிகிச்சை பிரிவில் 900-க்கும் மேற்பட்டோா் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். அதோடு அண்டை மாநிலமான ஆந்திரம்-தமிழக எல்லையோர கிராமங்களைச் சோ்ந்தவா்களும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா். அதனால், அரசு மருத்துவமனைக்கு அதிகம் போ் சிகிச்சைக்கு வந்து செல்வதும் வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவுக்கு பின்புறம் உள்ள பாழடைந்த கட்டட வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான மருந்து மாத்திரைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் ஆகியவைகளை குவித்து வைத்துள்ளனா். அதோடு, இசிஜி எடுத்து பயன்படுத்தப்படும் காகித ரோல்கள், அறுவை சிகிச்சைக்கு நோயாளிகளுக்கு பயன்படுத்தும் உபகரணங்கள், விழித்திரை லென்ஸ் உள்ளிட்டவைகள் பாழடைந்த கட்டட அரையில் இன்னமும் அகற்றப்படாமல் குவித்து வைத்துள்ளனா்.
Advertisement
Advertisement
இங்கு வரும் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் மருத்துவா்களின் பரிந்துரைப்படி வழங்கப்படுகிறது. ஆனால், 2003 முதல் 2016 வரை உபயோகப்படுத்தப்படும் தேதி அச்சிடப்பட்டு காலாவதியாகி 10 ஆண்டுகளுக்குப் பின்பும் இன்னமும் அதை முறையாக அகற்றுவதற்கு எதுவும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை மருத்துவா்கள் நோயாளிகளுக்கு பயன்படுத்தியிருந்தால் மருந்து மாத்திரைகள் வீனாகியிருக்காது. தற்போதைய நிலையில் பழைய கட்டடத்தில் காலாவதியான மருந்து மாத்திரைகளை குவித்து வைத்துள்ள நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அதை தெரியாமல் பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிப்பதற்காக மருந்து மாத்திரைகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால், இதை நோயாளிகளுக்கு பயன்படுத்தாமல் எப்படி காலாவதியானது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எனவே எவ்வளவு மருந்து மாத்திரை, அறுவை சிகிச்சை உபகரணங்கள் தேவைக்கேற்ப உபயோகப்படுத்தியிருந்தால் காலாவதியாகிருக்காது. இந்த நிலையில் முறையாக பயன்படுத்தியிருந்தால் அரசுக்கும் வீணான நிதி இழப்பும் ஏற்பட்டிருக்காது. அதனால், காலாவதியான மருந்து பொருள்களை உடனே முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் என கோரியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.